சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு
ADDED : மார் 03, 2026 06:29 AM

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை முடித்து மதுரை கீழமை நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.
சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் 2020 ஜூன் 19 ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டுக்கள் முருகன், சாமத்துரை, போலீஸ்காரர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து கைதாகினர். இவர்கள் மீது சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது.
ஜெயராஜ் மனைவி செல்வராணி,'வழக்கில் தொடர்புடைய போலீசார் செல்வாக்குமிக்கவர்கள். சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளது. இது விசாரணையை பாதிக்கும். மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை விரைவுபடுத்தி, குறிப்பிட்ட கால வரம்பில் முடிக்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார். இதனடிப்படையில் கீழமை நீதிமன்றம் விசாரணையை முடிக்க பலமுறை உயர்நீதிமன்றம் கால அவகாசம் அளித்தது.
கீழமை நீதிமன்றம் விசாரணையை முடிக்க மேலும் 4 மாதங்கள் அவகாசம் கோரி அனுப்பிய கடிதம் அடிப்படையில் 2025 நவ.26 ல் உயர்நீதிமன்ற நீதிபதி கே.முரளிசங்கர்,'கீழமை நீதிமன்றம் 3 மாதங்களில் விசாரணையை முடிக்க இறுதி அவகாசம் அளிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டார். கீழமை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டோர், சி.பி.ஐ.,தரப்பில் நேற்றுடன் வாதம் முடிந்தது. நீதிபதி முத்துக்குமரன்,'மார்ச் 23 ல் உத்தரவு பிறப்பிக்கப்படும்,' என்றார்.

