துணை ஜனாதிபதி தன்கர் கருத்து: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
துணை ஜனாதிபதி தன்கர் கருத்து: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
ADDED : ஏப் 19, 2025 01:42 AM

சென்னை: 'எந்த தனி நபரும், எத்தகைய உயர் பொறுப்பில் இருப்பவரானாலும், அவர் சட்டத்திற்கு கட்டுப்பட்டுத் தான் நடக்க வேண்டும். இதைத்தான் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியிருக்கிறது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கு கெடு விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்று முன்தினம் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு:
அரசியலமைப்பு சட்டத்தை நாம் ஏற்றுக் கொண்டு, 75 ஆண்டுகள் கடந்து விட்டன.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை சிதைத்து, பொது கருத்தாடலில் வலதுசாரி கருத்துக்களை திணிக்க முற்படும் தற்போதைய தீங்கானது, கவர்னர்கள், துணை ஜனாதிபதி, ஜனாதிபதி உள்பட அரசியலமைப்பு பதவிகளை, அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதில் இருந்து முளைத்த ஒன்றாகும்.
மக்கள் ஆட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தான் அரசை நடத்த வேண்டும். அலங்கார நியமன பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் அல்ல.
எந்த தனி நபரும், அது எத்தகைய உயர் பொறுப்பில் இருப்பவரானாலும், அவர் சட்டத்திற்கு கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும். இதைத்தான் உச்ச நீதிமன்றம் சுட்டிகாட்டியிருக்கிறது.
வரலாற்று சிறப்புமிக்க அத்தீர்ப்பு, தவறான வழிமுறைகளை சரிசெய்யும் நகர்வாகும். எனவே, இந்த வரவேற்கத்தகுந்த சீர்திருத்த நடவடிக்கை, பல ஜனநாயக விரோத சக்திகளை நிலைகுலைய வைத்துள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. தற்போதைய தேவை என்பது, இந்த சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதே.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.