" பகல்வேஷ பிரசாரம் மக்கள் மதிக்கவில்லை" - முதல்வர் ஸ்டாலின்
" பகல்வேஷ பிரசாரம் மக்கள் மதிக்கவில்லை" - முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜூலை 13, 2024 02:17 PM

சென்னை: 'தமிழகத்தை பொறுத்தவரை 2019ம் ஆண்டு முதல் தி.மு.க., தலைமையிலான இண்டியா கூட்டணியில் வெற்றி தொடர்கிறது' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
மக்களோடு நாங்கள் இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி மூலம், மக்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்பது உறுதியாகி உள்ளது. இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு மாபெரும் வெற்றி தந்த விக்கிரவாண்டி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி. திமுக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க வெற்றியாக இடைத்தேர்தல் வெற்றி அமைந்துள்ளது.
இண்டியா கூட்டணியின் வெற்றி
நாள்தோறும் நல்ல திட்டங்கள் என சாதனை செய்து வரும் தி.மு.க., அரசுக்கு மகுடம் சூட்டுவதாக விக்கிரவாண்டி வெற்றி அமைந்துள்ளது. இடைத்தேர்தலிலேயே போட்டியில்லை என்ற பா.ம.க., விக்கிரவாண்டியில் போட்டியிட முன்வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை 2019ம் ஆண்டு முதல் தி.மு.க., தலைமையிலான இண்டியா கூட்டணியில் வெற்றி தொடர்கிறது.
அவதூறு
சில கட்சிகளின் தயவால், மத்தியில் ஆட்சியமைத்த பா.ஜ.,வுக்கு தோல்வி முகமே இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. நாடு முழுவதும் 13 இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் 11 இடங்களில் இண்டியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும், என் மீதும் விதைத்து தங்களது தோல்வியை மறைக்க மிகக் கீழ்த்தரமான பிரசாரத்தை பா.ஜ., செய்தது. பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பிரசாரத்தை மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.