நீங்கள் கணவன், மனைவியா; பீச் ஜோடியிடம் கேட்ட போலீஸ்; வாக்குவாதம் வீடியோ வைரல்!
நீங்கள் கணவன், மனைவியா; பீச் ஜோடியிடம் கேட்ட போலீஸ்; வாக்குவாதம் வீடியோ வைரல்!
ADDED : பிப் 20, 2025 10:21 AM

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் அமர்ந்திருந்த ஜோடியிடம், 'நீங்கள் கணவன்-மனைவியா' என்று போலீஸ்காரர் கேள்வி எழுப்பினார். அவரிடம், பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை மக்களின் பிரதான பொழுதுபோக்கு மையமாக மெரினா கடற்கரை உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பேர் வந்து செல்லும் இடம் என்பதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு, கடற்கரை மணலில் அமர்ந்திருந்த ஆண் -பெண் ஜோடியிடம் சென்ற போலீஸ்காரர் ஒருவர், 'நீங்கள் கணவன் மனைவியா, ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்' என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது அந்த ஜோடிக்கும், போலீஸ்காரருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.துவக்கத்தில் உரத்த குரலில் பேசிய போலீஸ்காரர், பதிலுக்கு அந்தப் பெண்ணும் உரத்த குரலில் கேள்விகளை எழுப்பியதால், பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார். 'ஒரு பெண்ணும் ஆணும் பீச்சில் அமரக்கூடாதா? ஜோடியாக அமர்ந்திருந்தால் கணவன்- மனைவியா என்று கேட்பது நாகரிகமா? அப்படி எதுவும் சட்டம் இருக்கிறதா. பீச்சில் கணவன் மனைவி தான் உட்கார வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது'' என்று அந்த பெண் போலீஸ்காரரிடம் கூறினார்.
பதிலுக்கு அந்த போலீஸ்காரர், 'இன்று நான் உங்களிடம் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். தனியாக இருப்பவர்களை எப்படி டீல் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்' என்று சுருதி இறங்கி பேசினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண், ஒரு வக்கீல் என்பது அவரது சமூக வலைதள பதிவில் இருந்து தெரியவந்துள்ளது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'பட்டினப்பாக்கம் ரோந்து போலீஸ் எஸ்.ஐ.,யும் போலீஸ்காரரும் குண்டர்களைப் போல செயல்பட்டனர். அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படி பொதுமக்களை மிரட்டும் அதிகாரம் இவர்களுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.
வீடியோ வைரல்
போலீஸ்காரருக்கும், குறிப்பிட்ட அந்த பெண்ணுக்கும் இடையிலான வாக்குவாதம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதைப் பார்க்கும் நெட்டிசன்கள், அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகவும், போலீஸ் தரப்புக்கு ஆதரவாகவும் மாறி மாறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

