த.வெ.க., நிர்வாகிகள் மீது தாக்குதல்: விஜய் கண்டனம்
த.வெ.க., நிர்வாகிகள் மீது தாக்குதல்: விஜய் கண்டனம்
ADDED : மே 27, 2025 02:04 PM

சென்னை: ''த.வெ.க., நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை தேவை. மகளிருக்கு எதிரான அராஜக நிலை தொடர்ந்தால் சட்டப்போராட்டத்தை முன்னெடுப்போம்'' என த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தினர் சென்று அங்கிருந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் உணவும் வழங்கியுள்ளனர்.
அராஜகம்
பெண் நிர்வாகிகளை பூட்ஸ் காலால் வயிற்றில் எட்டி உதைப்பதையும், ஆடையைப் பிடித்து அந்த ஆடை கிழியும் அளவிற்கு அவர்களை இழுத்துத் தள்ளி விடும் போலீசாரின் செயலை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பெண்களை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும், அவர்களின் ஆடையைக் கிழித்தும் அராஜகமாக இழிவாகத்தான் நடத்த வேண்டும் என்று முதல்வர் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளாரா?
பாசிச ஆட்சி
தற்போது தமிழகத்தில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே என்பதற்கு இதைவிட சாட்சி தேவையா என்ன?
மக்களுக்கான ஆட்சி நடத்துகிறோம் என்று வெற்று விளம்பரம் செய்யும் முதல்வர் ஸ்டாலினின் அரசின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த அராஜகச் செயலில் ஈடுபட்டு தவறிழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப்போராட்டம்
போலீசார், ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருகப் பலத்தைக் காட்டி, மக்களிடம் வெறுப்புகளைக் குவித்து வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் ஸ்டாலின் தலைமையிலான விளம்பர மாடல் அரசு, பெண்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது. இதே போன்று மகளிருக்கு எதிரான அராஜக நிலை தொடர்ந்தால், சட்டப்போராட்டத்தை முன்னெடுக்கத் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.