பிரச்னையை சந்திக்கும் திறன் விஜய்க்கு இல்லை: இபிஎஸ் தாக்கு
பிரச்னையை சந்திக்கும் திறன் விஜய்க்கு இல்லை: இபிஎஸ் தாக்கு
UPDATED : பிப் 13, 2026 06:02 PM
ADDED : பிப் 13, 2026 04:44 PM

திருப்பத்தூர்: ஒரு பிரச்னையை சந்திக்கும் திறன் கூட விஜய்க்கு இல்லை. அவர் தேர்தலை சந்திக்கட்டும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் நிருபர்கள் சந்திப்பில், ஜெயலலிதா எம்ஜிஆர் வளர்த்த கட்சி சரண்டர் அடைந்து விட்டது என விஜய் கூறியுள்ளதாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு இபிஎஸ் கூறியதாவது: அவருக்கு என்னங்க தெரியும். ஒரு நிகழ்வு நடந்தது. நான் சொல்லக்கூடாது. திருப்பி திருப்பி கேட்பதால் சொல்கிறேன். ஒரு பிரச்னை நடந்தது. 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. விஜய் ஏன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கேட்கிறார்கள்.
தலைவரானால் கேட்க தான் செய்வார்கள். அதற்கு பதில் சொல்ல தான் வேண்டும். நீங்கள் என்னிடம் திருப்பி திருப்பி எத்தனை கேள்வி கேட்கிறீர்கள். ஒரு கட்சி தொடங்கி விட்டால் அந்தக் கட்சி குறித்து நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் மக்கள் கேள்விகளுக்கும் பதில் சொல்வது அந்த கட்சி தலைவரின் கடமை. ஆனால் அந்தக் கடமையை செய்து இருக்கிறாரா? திறன் இல்லை
15 நாட்கள் அலுவலகத்தையே மூடிவிட்டு போய் விட்டார்கள். அப்புறம் எங்க போய் கட்சி நடத்தி மக்களுக்கு நன்மை செய்யப் போகிறார்கள். ஒரு பிரச்னையை சமாளிக்க கூடிய திறன் கூட அவருக்கு இல்லையே? ஆனால் நான் யாரையும் குறை சொல்லவில்லை. இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், அந்தக் கட்சிக்கு தலைவராகலாம். மக்களை சந்திக்கலாம். மக்கள்தான் எஜமானர்கள். இறுதி தீர்ப்பு
மக்கள் கொடுக்கிற தீர்ப்பு தான் இறுதி தீர்ப்பு. எங்களைப் பொறுத்தவரை மக்களுக்காக நிறைய செய்திருக்கிறோம். நெஞ்சை நிமிர்த்தி மக்களிடம் போய் சொல்கிறோம். இன்னும் ஒரு முறை கூட விஜய் தேர்தலை சந்திக்கவில்லையே. தேர்தலை சந்தித்தால் தானே தெரியும். தேர்தலை சந்திக்கும் முன்பு யாரையும் கண்டுபிடிக்க முடியாது. தமிழக வாக்காளர்கள் விழிப்புணர்வு உடையவர்கள். யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும். எந்த ஆட்சி வந்தால் நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றும் தெரியும்.
மக்களுக்கு தெரியும்
தமிழகம் இன்றைக்கு இந்தியாவிலேயே உயர்ந்த நிலைக்கு அடைந்ததற்கு காரணம் அதிமுக தான். அதிமுக ஆட்சியின் வரலாறு நாட்டு மக்களுக்கு தெரியும். அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு செய்த திட்டங்கள் மக்களுக்கு நன்றாக தெரியும். எத்தனை கல்லூரிகளை நாங்கள் திறந்து இருக்கிறோம். எத்தனை மாவட்டங்களை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் தான் நாட்டு மக்களுக்கு நன்மை கிடைத்தது. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

