கட்சி தொடங்கிய விஜய்; கமல் அடைந்த தோல்வியில் கற்க வேண்டியவை ஏராளம்!
கட்சி தொடங்கிய விஜய்; கமல் அடைந்த தோல்வியில் கற்க வேண்டியவை ஏராளம்!
UPDATED : அக் 28, 2024 06:38 AM
ADDED : அக் 27, 2024 10:41 AM

சென்னை: தனக்கு முன் கட்சி தொடங்கிய தமிழக நடிகர்களின் வெற்றி தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்தாலே, நடிகர் விஜய் நல்லதொரு பாடத்தை கற்றுக் கொள்ள முடியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கும் முதல் நடிகர் அல்ல விஜய்; அவருக்கு முன் ஏற்கனவே பல நடிகர்கள் கட்சி தொடங்கி நடத்திப் பார்த்துவிட்டனர். அவர்களில் சரித்திரம் படைத்தவர் எம்.ஜி.ஆர்., மட்டுமே; அவருக்கு போட்டியாக திரையுலகில் சாதனை படைத்த சிவாஜி, எம்ஜிஆரின் கலை உலக வாரிசு என அறிவிக்கப்பட்ட பாக்யராஜ், டி.ராஜேந்தர் ஆகியோர் அரசியலில் தனியாக கட்சி தொடங்கியும் சாதிக்க முடியவில்லை.
ஆனால் விஜயகாந்த் கட்சி தொடங்கி குறிப்பிடத்தக்க சாதனை படைத்தார். முதல் தேர்தலில் எம்.எல்.ஏ., ஆகவும், அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்தார்.
அவரது உடல் நலக்குறைவால் அவரது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுவிட்டது.
இன்னொரு நாயகர் சரத்குமார், தனியாக கட்சி தொடங்கியும் சாதனை எதையும் செய்ய முடியவில்லை. வேறு வழியின்றி கட்சியை கலைத்துவிட்டு பா.ஜ., கட்சியில் ஐக்கியம் ஆகிவிட்டார்.
தமிழ் திரை உலகில் பல்லாண்டுகளாக நிலைத்திருக்கும் கமல், பல்வேறு தரப்பினரின் ஆரவாரங்களுக்கு மத்தியில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். தனித்தும் போட்டியிட்டார். அவரது முதல் மாநாட்டில் கெஜ்ரிவால் உள்ளிட்ட வி.ஐ.பி.,கள் கலந்து கொண்டனர். ஆனாலும் அவரால் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெற முடியவில்லை. விஜயகாந்த் அடைந்த வெற்றியை கூட கமல் பெற முடியாத நிலையில், ஒற்றை எம்.பி., பதவிக்காக தி.மு.க.,விடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சினிமாவில், பல்லாண்டு காலம் நாயகனாக ஆதிக்கம் செலுத்தி வரும் கமல், அரசியலில் ஒரு துணை கதாபாத்திரமாகவே இருக்கிறார்.
விஜயகாந்த், கமல் ஆகியோர் கட்சி தொடங்கியபோது அவர்களது ரசிகர்கள் மத்தியில் இருந்த ஆர்வம் விஜய் ரசிகர்களிடம் இப்போது இருப்பதை காண முடிகிறது. ரசிகர்களின் ஆர்வமும் உற்சாகமும் நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடியது அல்ல என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியலில் கமல் தோற்றுப் போனதற்கான காரணங்களை புரிந்து கொண்டாலே, விஜய்க்கு நல்லதொரு பாடம் கிடைத்துவிடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.