திமுக, அதிமுக, பாஜ கட்சிகள் மீது விஜய் கடும் விமர்சனம்; பழைய தகர டப்பாவை உருட்டுவதாக கிண்டல்
திமுக, அதிமுக, பாஜ கட்சிகள் மீது விஜய் கடும் விமர்சனம்; பழைய தகர டப்பாவை உருட்டுவதாக கிண்டல்
UPDATED : பிப் 02, 2026 10:30 PM
ADDED : பிப் 02, 2026 12:31 PM

சென்னை: தவெக
மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய நடிகர் விஜய், திமுக, அதிமுக, பாஜ
மீது கடும் விமர்சனத்தை முன் வைத்தார். எம்ஜிஆர் மீது வைக்கப்பட்ட அதே
விமர்சனத்தை தன் மீதும் வைப்பதாக கூறிய அவர், 'பவள விழா பாப்பாவுக்கு பழைய
தகர டப்பாவை உருட்டத்தான் தெரியும்' என்று கூறினார்.
விஜய்
பேசியதாவது: நமது கட்சியின் 3ம் ஆண்டு தொடக்க விழா. இன்றைக்கு தமிழகத்தில்
மிகப்பெரிய கட்சியாக வளர்ந்து இருக்கிறோம் என்றால், அது உங்களால் தான்.
நம்மை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்களும் தான், அதுக்கு ஒரு மிக முக்கிய
காரணம். நீங்கள் எங்களுடைய மிகப்பெரிய பலம். உங்களை நம்பி தான் நானும்,
நமது கட்சியும் இருக்கிறோம்.
இதை நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய
வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
கட்சியினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மைக்கை பிடித்தாச்சு, வெடியை
கொளுத்தி போட்டுவிடலாமா?
கண்ணீரை துடைக்க…
1977 ஜூன் மாதம்
எம்ஜிஆர் ரேடியோவில் ஒரு பேட்டி கொடுத்தார்.
அண்ணாதுரை இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலைமை ஏற்பட்டதை
நினைத்து எண்ணி, எண்ணி கண்ணீர் வடித்தேன் என எம்ஜிஆர் கூறினார்.
அன்றைக்கு
அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம் தான் அதிமுக என சொன்னார். அதே
மாதிரி 2017, 2021ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தின் நிலைமையை யோசித்து
பார்த்த மக்கள், காமராஜர், அண்ணாதுரை, எம்ஜிஆர் அமர்ந்த இடத்தில்
இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலைமை ஏற்பட்டது என்று கண்ணீர் வடித்தார்கள்.
இன்றைக்கு கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம் தான் தமிழக வெற்றிக்கழகம்.
இப்படி எல்லாம் பேசுவதால் சில பேர் கொந்தளிப்பார்கள்.
பவள விழா பாப்பா
எம்ஜிஆர்
கட்சி ஆரம்பித்த போது, ஜெயித்த போது கூட சட்டசபையில் ஒரு நடிகர் கட்சி
வந்து இருக்கிறதாம், ஏதோ ஒரு புதிய கட்சி வந்து இருக்கிறது என கேலியும்,
கிண்டலும் செய்தனர். யார் அரசியலுக்கு வந்தாலும் கொந்தளிப்பது தான்
அவர்களுடைய வேலை.
அவர்கள் செய்யும் அட்ராசிட்டி பற்றி நாம் எடுத்து
சொன்னால், அவர்கள் செய்யும் ஊழல் குறித்து நாம் எடுத்து சொன்னால், 50
ஆண்டுக்கு முன் இருந்த அதே தகர டப்பாவை எடுத்து உருட்ட ஆரம்பித்து
விடுவார்கள்.
பவள விழா பாப்பாவுக்கு என்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும்? நாம் அவர்கள் செய்யும் தவறை சொல்லாமல் இருக்க முடியுமா? சொல்லுவோம்,சொல்லிக்கொண்டே இருப்போம். அவர்களை கேள்வி கேட்க நம்மை தவிர வேறு யாருக்கு தைரியம் இருக்கிறது?
திருக்குறள்
இன்றைக்கு டிஜிட்டல் உலகத்தில் திருவள்ளுவர் இருந்திருத்தால் இந்த தீயசக்தி பற்றி என்ன திருக்குறள் எழுதியிருப்பார்.
அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என எழுதியிருப்பார்.
மும்முனை போட்டி,
நான்கு முனை போட்டி என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்களை பொறுத்தவரைக்கும்
அப்படி இருக்கட்டும். மாபெரும் மக்கள் கூட்டணி சக்தியை கொண்ட நாம் ஒரு அணி
ஒருபக்கம், திமுக கூட்டணி ஒருபக்கம், பாஜ., கூட்டணி மற்றும் பலர். எத்தனை
சக்திகள் வந்தாலும் திமுகவை வீழ்த்த தவெகவால் மட்டும் தான் முடியும்.
ஒவ்வொரு வீட்டிலும் விஜய்
இப்படி இருக்கும் நிலைமையில், ''ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா, ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா'' என்று எல்லாம் கேட்கும் போது, இவர்கள்ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் விஜயை கூப்பிடும் மாதிரி தெரிகிறது. அதனால் பொறுங்கள் பாஸ், வருவார்கள். ஓட்டு போடும் அன்றைக்கு ஒவ்வொரு வீட்டில் இருக்கும் ஒவ்வொரு விஜயும், விஜியும் பூத் பூத்தாக காலையில் வந்து நிற்பார்கள். அன்றைக்கு பாருங்கள் ஏன் இந்த விஜயை கூப்பிட்டோம் என்று தெரியும். நான் சினிமாவை விட்டாலும் நீங்கள் விட மாட்டீங்களே, இப்பொழுது கருத்துக்கணிப்பு என்று ஒன்று போய் கொண்டு இருக்கிறது. அதில் நிறைய பேர் உண்மையான கருத்துக்கணிப்புகள் சொல்கிறார்கள், அதனை நான் தப்பு சொல்லவில்லை.
விசிலுக்கு ஓட்டு
சிலர் கடுப்பில் விட்ட கருத்துக்கணிப்பும் இருக்கிறது. கடுப்பில் விட்ட கணிப்பாளருக்கு நான் சொல்வது, ''ஒவ்வொரு ஊர் ஊராக, வீடு வீடாக நீங்கள் கருத்துக்கணிப்பு எடுத்து பாருங்கள், ஒவ்வொரு வீட்டிலும் தவெக இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அதிர்ச்சியாக இருந்தால் திரும்ப கருத்துக்கணிப்பு எடுங்கள். அதே ரிசல்ட் தான் வரும். நமது சிஎம் சார், ஸ்டாலின் சார் இருக்கிறார்கள், 2 வருடங்களுக்கு முன், மேடையில் பேசும் போது கட்சியினரின் அட்ராசிட்டியால் ராத்திரி தூக்கம் வரவில்லை என்றார். அவர் என்னைக்காவது அசந்து தூங்கும் போது சார் எந்த சின்னத்திற்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்டு பாருங்கள், விசில் சின்னத்துக்கு தான் ஓட்டு போடுவேன் என சொல்வார்.
கள நிலவரம்
விசில் சின்னம் போகாத ஊரே இல்லை. விசில் சின்னம் எங்கு எல்லாம் இருக்கிறதோ அங்கு எல்லாம் தவெக இருக்கிறது. என்னுடைய அம்மா, தங்கைகள், அண்ணன், தம்பிகள் தவெகவுக்கு ஓட்டு போடுவதை யாராலும் தடுக்க முடியாது. ரத்த சொந்தமாக நம்மளை நினைப்பவர்களை எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கவே முடியாது. நான் நம்பிக்கையில் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள். கள நிலவரம், கள யதார்த்தமும் இதுதான். தீயசக்தியை தூய சக்தியான நாம் தான் வீழ்த்த முடியும்.
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்களுக்கு ஒரே ஆப்ஷன் தவெக தான். இந்த டப்பா இன்ஜின், ஓட்டை இன்ஜின், எவ்வளவு இன்ஜின் வந்தாலும், டாப் இன்ஜின் நம்ம தவெக தான் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். இதனை மனதில் வைத்து கொண்டு கட்சியினர் வேலை செய்ய வேண்டும். விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைப்பது தான் உங்களது வேலை. மற்றது எல்லாம் மக்களுடன் இணைந்து நான் பார்த்து கொள்கிறேன்.
ஓட வேண்டும்
நம்ம மக்கள் விசில் ஊதுற ஊதில் இந்த ஊழல் சக்தியும், தீய சக்தியும் தெறித்து ஓட வேண்டும்.
அன்றைக்கு தவெக ஆளும் கட்சியாக எழும். உங்களுடன் நான் இருக்கிறேன். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். இதுக்கு மேல் என்ன வேண்டும்? நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி, வணக்கம். இவ்வாறு விஜய் பேசினார்.
தினமலர் நேரலை!
தமிழக வெற்றிக்கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி, தினமலர் இணையதளம், யுடியூப் பக்கத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

