தமிழகத்தில் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த இயலாது: முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த இயலாது: முதல்வர் ஸ்டாலின்
UPDATED : நவ 27, 2024 06:42 PM
ADDED : நவ 27, 2024 05:40 PM

சென்னை: '' மத்திய அரசால் நடத்தப்படும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், ஜாதி அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் என்பதால், அதனை செயல்படுத்த இயலாது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு, பல்வேறு வகையில் நிதியுதவி, கடனுதவி அளிப்பதற்காக, 'விஸ்வகர்மா யோஜனா' என்ற திட்டத்தை, 2023 ம் ஆண்டு பிரதமர் துவக்கி வைத்தார். இத்திட்டமானது, 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், நாடு முழுதும் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன . இத்திட்டத்தின் கீழ், அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, நிதி உதவி, கருவிகள் மற்றும் சந்தைபடுத்துதலில் உதவி உள்ளிட்டவை வழங்கப்படும்.
இந்நிலையில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சிக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: விஸ்வகர்மா திட்டம் ஜாதி அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு விரிவான ஆய்வை மேற்கொண்டு இத்திட்டத்தில் மாற்றங்களை செய்ய பரிந்துரைத்தது. அவற்றை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
பரிந்துரை1. விண்ணப்பதாரரின் குடும்பம், பாரம்பரியமாக குடும்ப அடிப்படையிலான வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத் தேவையை நீக்க வேண்டும். அதற்கு பதில், வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டு உள்ள எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு நபரும் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி உடையவராக இருக்க வேண்டும்.
2. இத்திட்டத்தில் பயன்பெறுவோரின் குறைந்தபட்ச வயது வரம்பினை 35 ஆக உயர்த்தலாம். இதனால், தங்கள் குடும்ப வர்த்தகத்தைத் தொடர அதனை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற முடியும்.
3. கிராமப்புறங்களில் பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பு கிராம பஞ்சாயத்து தலைவருக்கு பதிலாக, வருவாய்த்துறையைச் சேர்ந்த வி.ஏ.ஓ.,விடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
ஆனால், மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்திடம் இருந்து வந்த பதில் கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
எனவே பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்துவதை தமிழக அரசு முன்னெடுத்துச் செல்லாது. இருப்பினும், சமூக நீதி என்ற ஒட்டுமொத்த கொள்கையின் கீழ் தமிழகத்தில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத கைவினைஞர்களை உள்ளடக்கி, விரிவான திட்டம் ஒன்றை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு செயல்படுத்தும் இந்த திட்டம், ஜாதி மற்றும் குடும்பத் தொழில் வேறுபாடின்றி, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களும் முழுமையான ஆதரவு அளிக்கும். இத்திட்டம் அவர்களுக்கு நிதியுதவி, பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் விரிவாக உள்ளடக்கியதாக இருக்கும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.