துவங்கியது ஊதிய ஒப்பந்த பேச்சு: இடைக்கால நிவாரணம் வழங்க பஸ் ஊழியர்கள் வலியுறுத்தல்
துவங்கியது ஊதிய ஒப்பந்த பேச்சு: இடைக்கால நிவாரணம் வழங்க பஸ் ஊழியர்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 28, 2024 03:44 AM

சென்னை : அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான, 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு நேற்று துவங்கியது. ஊதிய ஒப்பந்தம் இறுதியாகும் வரை, இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், அடுத்த ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தப்படாமல் இருந்தது. தொழிற்சங்கங்களின் பல கட்ட போராட்டங்களுக்கு பின், ஊதிய ஒப்பந்தத்துக்கான முதற்கட்ட பேச்சு, சென்னை குரோம்பேட்டையில் நேற்று நடந்தது.
அரசு தரப்பில் போக்குவரத்துத் துறை செயலர் பணீந்திர ரெட்டி, நிதித்துறை செயலர் அருண் சுந்தர் தயாளன் மற்றும் எட்டு போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குனர்கள், தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - அ.தொ.பே., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட, 84 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
![]() |
இதுகுறித்து, தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் கூறியதாவது:
முதற்கட்ட பேச்சு என்பதால், அறிமுக கூட்டமாக நடந்தது. இருப்பினும், இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டும்; அடுத்தகட்ட பேச்சை விரைந்து நடத்த வேண்டும்; ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட விஷயங்களை பேசி தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஊதிய ஒப்பந்த பேச்சில், பொதுவான கோரிக்கைகள் பற்றி விவாதித்தோம். அடுத்த கூட்டங்களில், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மாதந்தோறும், 526 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கியது போல, மற்ற போக்குவரத்துக் கழகங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க அரசிடம் பேசி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.