ADDED : ஜன 16, 2024 12:14 AM

ஆண்டிபட்டி : -மழையால் நிரம்பிய வைகை அணை நீர்மட்டம் 71 அடியாக உயர்ந்த நிலையில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.
தேனி மாவட்டம் வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கிறது. வடகிழக்கு பருவ மழையால் அதிகரித்த நீர்வரத்தால் நீர்மட்டம் ஜன., 6 அதிகாலை 4:45 மணிக்கு முழு அளவான 71 அடியாக உயர்ந்தது.
அணைக்கு வரும் நீர் முழுவதும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. ஜன.,7ல் வினாடிக்கு 5457 கன அடி வரை வெளியேறிய நீரின் அளவு படிப்படியாக குறைந்தது.
10 நாட்களாக நீர்மட்டம் 71 அடியாகவே தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1191 கன அடியாக இருந்தது. அணையின் பெரிய மதகுகள் வழியாக நீர் திறப்பு நிறுத்தப்பட்டு, சிறிய மதகுகள் வழியாக வெளியேறுகிறது.