ADDED : டிச 23, 2024 08:16 AM
கோல்கட்டா,: ஜம்மு - காஷ்மீர் போலீசாரால் நீண்ட நாட்களாக தேடப்பட்ட பயங்கரவாதியை, மேற்கு வங்கத்தில் அம்மாநில போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் ஜாவேத் முன்ஷி. இவர், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இயங்கும் தெஹ்ரீக் - இ - முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என ஜம்மு - காஷ்மீர் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், அவர் நீண்டகாலமாக தலைமறைவாக இருந்தார்.
இதற்கிடையே, மேற்குவங்கத்தில் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் கானிங் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஜாவேத் முன்ஷி சென்றதாக ஜம்மு - காஷ்மீர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேற்குவங்க போலீசாரின் உதவியுடன், ஜாவேத் முன்ஷியை அவர்கள் தொடர்ந்து கண்காணித்தனர்.
இந்நிலையில், அங்குள்ள மருத்துவமனை அருகே ஜாவேத் முன்ஷி சென்றபோது இருமாநில போலீசாரும் நேற்று சுற்றிவளைத்து கைது செய்தனர். இதையடுத்து, அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின், ஜாவேத்தை ஜம்மு - காஷ்மீர் போலீசாரிடம் மேற்குவங்க போலீசார் ஒப்படைத்தனர்.
தடை செய்யப்பட்ட வங்கதேச அன்சார் - அல் - இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த குழு, வடகிழக்கு மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது. இதையடுத்து, நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் மேற்கு வங்கத்தில் இரண்டு பேர் உட்பட எட்டு பயங்கரவாதிகள், டிச. 19ல் கைது செய்யப்பட்டனர்.