எங்களுக்கும் சுவாமி நம்பிக்கை: தி.மு.க., ராஜா திடீர் 'குண்டு!'
எங்களுக்கும் சுவாமி நம்பிக்கை: தி.மு.க., ராஜா திடீர் 'குண்டு!'
ADDED : பிப் 02, 2026 06:05 AM

பெரம்பலுார்: ''எங்களுக்கும் சுவாமி நம்பிக்கை வந்துடுச்சி,'' என, தி.மு.க., துணை பொதுச்செயலர் ராஜா அதிரடியாக பேசியுள்ளார்.
பெரம்பலுாரில் நேற்று முன்தினம் நடந்த தி.க., பொதுக் கூட்டத்தில் ராஜா பேசியதாவது: உ.பி.,யின் அகிலேஷ் யாதவாக இருந்தாலும் சரி, மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜியாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எதிராக, இ.டி., - ஐ.டி., - சி.பி.ஐ., என அத்தனையையும் வைத்து மிரட்டுகின்றனர்.
எல்லா மாநிலங்களிலும் நுழையும் பா.ஜ.,வால், தமிழகத்துக்குள் நுழைய முடியவில்லை. 'அது எப்படி?' என தி.மு.க., - எம்.பி.,க்களை பார்த்து பலர் கேட்கின்றனர். நாங்கள், கரைவேட்டி கட்டிக்கொண்டு பார்லிமென்ட் போனால், பா.ஜ., - எம்.பி.,க்கள் எங்களை பார்த்து அச்சப்படுகின்றனர்.
அதற்கு காரணம், தமிழகத்தில் எல்லை சுவாமிகள் இருப்பது தான். எங்களுக்கும் சுவாமி நம்பிக்கை வந்து விட்டது. 92 வயதில் வீரமணி என்ற ஒரு எல்லைச்சாமி இருக்கிறார். அதேபோல, 72 வயதில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் என்ற இன்னொரு எல்லைச்சாமி கோட்டையில் இருக்கிறார்.
இந்த இரு எல்லைச்சாமிகளும் தமிழகத்தில் இருக்கும் வரை, ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி என எல்லாரும் உயிருடன் இருப்பதாகவே அர்த்தம். அந்த நம்பிக்கை இருக்கும் வரை, தமிழகத்துக்குள் மோடியோ, அமித் ஷாவோ யாரும் உள்ளே நுழைய முடியாது. அது எங்கள் சூத்திரம்.
நமக்கு தேவையாக இருக்கும் தத்துவத்திற்கு ஒரு தலைவரும்; அந்த தத்துவத்தை வைத்து ஆட்சி செய்யும் ஒரு தலைவரும் இருக்கும் வரை, இன்னும் 2,000 ஆண்டுகளுக்கு மோடியையும், அமித் ஷாவையும் இம்மண்ணில் இருந்து ஓட்டக்கூடிய வலிமையை அவர்கள் தருவர்.
ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவர், 'நாங்கள் டில்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல்' என்ற துணிச்சல் கொண்டவர். அந்த துணிச்சல் வேறு யாருக்கும் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

