ADDED : பிப் 29, 2024 06:40 AM

சென்னை: ''பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் உள்ளோம். பிரதமர் விழாவுக்கு அழைக்காததில், எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. இரு தரப்பிலும் பரஸ்பர உணர்வோடு பேசிக் கொண்டிருக்கிறோம்,'' என, முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., தெரிவித்தார்.
தமிழகத்தில் பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்ற, சிறிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோர் அழைக்கப்படவில்லை. இது, அவர்களின் தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, நேற்று ஓ.பி.எஸ்., அளித்த பேட்டி: பா.ஜ., மேல் மட்டத்தில் உள்ளவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். காலம் கனிந்து வருகிறது. எதிர்பார்க்கும் பதில், நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்படும். தேசிய கட்சியாக உள்ள பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் உள்ளோம்.
பிரதமர் விழாவுக்கு அழைக்கவில்லை. அதனால் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. இரு தரப்பிலும் பரஸ்பர உணர்வோடு பேசிக் கொண்டிருக்கிறோம். இன்று நடக்கும் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், உரிய தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

