ADDED : பிப் 29, 2024 03:00 AM
சென்னை:''பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் உள்ளோம். பிரதமர் விழாவுக்கு அழைக்காததில், எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. இரு தரப்பிலும் பரஸ்பர உணர்வோடு பேசிக் கொண்டிருக்கிறோம்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழகத்தில் பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்ற, சிறிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோர் அழைக்கப்படவில்லை.
இது, அவர்களின் தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:
பா.ஜ., மேல் மட்டத்தில் உள்ளவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். காலம் கனிந்து வருகிறது.
எதிர்பார்க்கும் பதில், நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்படும். தேசிய கட்சியாக உள்ள பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் உள்ளோம்.
பிரதமர் விழாவுக்கு அழைக்கவில்லை. அதனால் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. இரு தரப்பிலும் பரஸ்பர உணர்வோடு பேசிக் கொண்டிருக்கிறோம். இன்று நடக்கும் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், உரிய தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மோடி ஆட்சி தொடர வேண்டும்
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என்பது, எங்கள் அரசியல் நிலைப்பாடு. எதிர்க்கட்சிகள் சார்பில், 'இண்டியா' என்ற கூட்டணியை உருவாக்கி போட்டி போடுகின்றனர். இந்தியாவின் கடந்தகால வரலாற்றை பார்க்கும்போது, பல கட்சிகள் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றி, குழப்பத்தை விளைவித்தனர்; நிலையான ஆட்சி ஏற்படவில்லை. இன்றைக்குள்ள சூழ்நிலையில், இந்தியாவில் நிலையான ஆட்சி வேண்டும். நிலையான ஆட்சி தரும் வசதி பிரதமர் மோடிக்கும், அவர் சார்ந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் உள்ளது. நாட்டின் நலன் கருதி, நிலையான ஆட்சி தொடர வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் அறிவிக்கும்போது, எத்தகைய அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும் என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலர்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்பார். எங்கள் அணி தமிழகத்தில், 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிடும்.
- பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்

