ADDED : பிப் 23, 2024 11:25 PM

சென்னை:''முதல்வரை நம்பி ஏமாந்து விட்டோம். நம் உரிமைகளை போராடித்தான் பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்,'' என, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் நேற்று, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் சார்பில், உணவு இடைவேளையில், கோரிக்கை முழக்க கூட்டம் நடந்தது. ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.
கூட்டத்தில், சங்கத் தலைவர் வெங்கடேசன் பேசியதாவது:
கடந்த 15ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தோம். முதல்வர், கடந்த 13ம் தேதி, மூன்று அமைச்சர்களை அனுப்பி பேச்சு நடத்தினார். மறுநாள் முதல்வர் நம்மை அழைத்து பேசினார்.
இதுவரை, 115 அரசாணையை ரத்து செய்தது தவிர, முதல்வரை சந்தித்தது போட்டோ ஷூட்தான்.
இம்முறை முகமலர்ச்சியுடன் வரவேற்றார். அவரிடம், 'திராவிட மாடல் ஆட்சி என்கிறீர்கள். தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என வலியுறுத்தினோம்.
'நான் செய்யாமல் உங்களுக்கு யார் தருவர்...' என உத்தரவாதம் அளித்தார். அதை நம்பி தற்காலிகமாக ஒரு நாள் வேலை நிறுத்தத்தை ஒத்தி வைத்தோம்.
ஆனால், முதல்வரை நம்பி ஏமாந்து போனோம். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கின்றனர். நாம் போராடாமல் இருந்தால், கோரிக்கை எதுவும் நிறைவேறாது. நம் உரிமைகளை போராடித்தான் பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.