'ஆறு மருத்துவ கல்லுாரிகள் துவங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்' அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
'ஆறு மருத்துவ கல்லுாரிகள் துவங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்' அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
ADDED : ஜன 10, 2025 12:58 AM

சென்னை:''தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவக்க, மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - கிருஷ்ணசாமி: சென்னை அருகே பூந்தமல்லி தொகுதியில், மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லுாரி துவக்க வேண்டும்.
அமைச்சர் சுப்பிரமணியன்: தற்போது, 38 மாவட்டங்களில், 36 அரசு மருத்துவக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லுாரி துவக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. திருவள்ளூர் மாவட்டத்தில், ஏற்கனவே ஒரு அரசு மருத்துவக் கல்லுாரி உள்ளதால், பூந்தமல்லியில் துவக்க வேண்டிய அவசியம் இல்லை.
அ.தி.மு.க., - அய்யப்பன்: உசிலம்பட்டி தொகுதியில் உள்ள எம்.கல்லுப்பட்டியில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும்.
அமைச்சர்: புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., - பிரபாகரன்: கடந்த, 2011ல் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லுாரி, பெரம்பலுாரில் துவக்கப்படவில்லை. எனவே, கருணாநிதி பெயரில் அங்கு மருத்துவக் கல்லுாரி துவக்க வேண்டும்.
அமைச்சர்: பெரம்பலுார், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லுாரிகள் தேவை என, மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
துணை சபாநாயகர் பிச்சாண்டி: திருவண்ணாமலை மருத்துவக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான, 100 இடங்களை, 150 ஆக அதிகரிக்க வேண்டும்.
கீழ்பென்னாத்துார் மருத்துவ குடியிருப்புகள் பழுதடைந்துள்ளன. அவற்றை அகற்ற வேண்டும்.
மருத்துவக் கல்லுாரி உயர் படிப்பில் ஒரு இடம் கூட காலியாக இருக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
அமைச்சர்: திருவண்ணாமலையில் மருத்துவ படிப்பு இடங்களை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் மத்திய அமைச்சரை சந்தித்து, கோரிக்கை வைக்க உள்ளோம். மருத்துவ உயர் படிப்பில், இடம் காலியாக இல்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.