எங்களை விட்டு போக வேண்டாம் என ஓ.பி.எஸ்.,சிடம் சொன்னோம்: இ.பி.எஸ்., பேச்சு
எங்களை விட்டு போக வேண்டாம் என ஓ.பி.எஸ்.,சிடம் சொன்னோம்: இ.பி.எஸ்., பேச்சு
UPDATED : மார் 02, 2025 08:59 PM
ADDED : மார் 02, 2025 08:51 PM

தேனி: '' எங்களை விட்டுப் போக வேண்டாம் என ஓ.பி.எஸ்.,சிடம் கெஞ்சினோம். நீங்களாக போனீர்கள். அதற்கு நாங்களா காரணம்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
போட்டோஷூட்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தேனியில் நடந்தது. இந்த கூட்டத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: நான்கு ஆண்டு ஆட்சியில் தேனி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. இம்மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தைக் கூட தி.மு.க., கொண்டு வரவில்லை. ஆனால், ஸ்டாலின், தினமும் போட்டோஷூட் நடத்திக் கொண்டு உள்ளார்.
எங்கே போனார்
ஆட்சிக்கு வந்தது முதல், திராவிட மாடல் அரசு என ஸ்டாலின் சொல்லிக் கொண்டு உள்ளார். தமிழகத்தில் நடப்பது ஸ்டாலின் மாடல் அரசு. பாலியல் வன்கொடுமை தினமும் நடக்கிறது. சிறுமி முதல் மூதாட்டி வரை, பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். பள்ளிகளில் ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறு, மற்ற ஆசிரியர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இப்போது, மாணவிகள் தன்னை அப்பா அப்பா என அழைப்பதாக ஸ்டாலின் சொல்லிக் கொண்டு உள்ளார். சிறுமிகள், அப்பா, அப்பா என கதறும் போது இந்த அப்பா ஸ்டாலின் எங்கே போனார். ஏ.டி.ஜி.பி., அந்தஸ்திலான பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என சொல்லும் அளவுக்கு நிலை உள்ளது. பெரிய பதவியில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண பெண்களின் நிலை என்ன?.
தி.மு.க., அரசை அகற்ற வேண்டும். தி.மு.க.,வைத் தவிர எங்களுக்கு எதிரி வேறு யாரும், எந்த கட்சியும் இல்லை.இந்த ஆட்சியை அகற்றவேண்டும் என்பது தான் எங்களின் தலையாய கடமை.
தி.மு.க.,வுக்கு துணை
இங்கு ஒருவர் இருக்கிறார். அவர் என்னை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் எனது பெயரை கூட சொல்லவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்றதும் தர்மயுத்தம் பண்ணினார். நான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டேன். அ.தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்று எதிர்த்து ஓட்டுப்போட்டார்.ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்த தி.மு.க.,வுக்கு இந்த மண்ணில் பிறந்தவர் துணை நின்றார். இரட்டை இலையை முடக்கவேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு கடிதம் கொடுத்தார். தொண்டர்களின் சொத்தான கட்சி தலைமை அலுவலகத்தை ரவுடிகளை அடித்து நொறுக்கி, சீல் வைத்தது இது துரோகம் இல்லையா?
நாங்களா துரோகம் செய்தோம். நாங்கள் எவ்வளவு கெஞ்சிப்பார்த்தோம். எங்களை விட்டு போகாதீர்கள் என.நீங்களாக போனீர்கள். அதற்கு நாங்களா காரணம்.எங்கள் மீது பழி சுமத்தி பிரயோஜனம் இல்லை. கடந்த காலத்தை எண்ணிப் பாருங்கள்.
கரைசேரும் கப்பல்
எப்போது பார்த்தாலும் சீனியர்... சீனியர் என்கிறீர்கள். நீங்கள் 2001ல் தான் எம்.எல்.ஏ., ஆனீர்கள்; நான் 1989ம் ஆண்டே எம்.எல்.ஏ., ஆனவன். ஆனால்,உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் ஏற்றுக் கொண்டோம். உங்கள் பின் நின்றோம். உங்கள் தோளோடு தோள் நின்று பணியாற்றினோம். ஆனால், பதவி இல்லை என்றால் யாரையும் ஏற்க மாட்டார். கட்சியை பார்க்க மாட்டார். அவரை மட்டும் தான் பார்ப்பார். கட்சிக்கு விஸ்வாசமாக இருந்த நான் உங்கள் முன் நிற்கிறேன். துரோகம் செய்தவர் எங்கு நிற்கிறார் என பாருங்கள். நீங்கள் யாரால் வந்தீர்கள் என உங்களுக்கு தெரியும். அவர், வயதில் மூத்தவர் . அண்ணன் என்று தான் சொன்னேன்.
வழிகாட்டியாக இருக்க வேண்டிய அவர், பதவி கிடைக்காத காரணத்தினால் ஏதேதோ பேசிக் கொண்டு உள்ளார். கடவுள் இருக்கிறார். யார் நல்லவர், கெட்டவர் என முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது கரைசேரும் கப்பல்; இந்தக் கப்பலில் ஏறினால் பிழைக்கலாம், இல்லையென்றால் நடுக்கடலிலேயே போகலாம். இவ்வாறு அவர் பேசினார்.