ADDED : செப் 26, 2025 01:35 AM

சென்னை: சென்னை, அம்பத்துாரில் கட்சியின் தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டபின், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அளித்த பேட்டி:
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.ம.மு.க., வெளியேறியதற்கு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையின் துாண்டுதல் தான் காரணம் என, சிலர் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர்.
அடுத்தவர் துாண்டுதல் பேரில் செயல்பட, அ.ம.மு.க., ஒன்றும் தெரியாத இயக்கம் அல்ல. அப்படியொரு அவசியம் எங்களுக்கு இல்லை.
அண்ணாமலை, தன் மீதான அனைத்து குற்றசாட்டுக்களுக்கும் பதில் அளித்து விட்டார். அதனால், அது குறித்து விவாதிக்க எதுவும் இல்லை. தனது செயல்பாடுகளால், அவர் உயர்ந்த நிலைக்கு வருவார் என்ற நம்பிக்கை என்னைப் போன்றவர்களுக்கு உள்ளது.
எங்கள் கூட்டணி குறித்து, வரும் டிசம்பரில் தான் தகவல் வெளியிடுவோம். அதுவரை எல்லாரும் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். நடிகர் விஜயுடன், அ.ம.மு.க., கூட்டணி பேசி முடித்து விட்டதாக கூறப்படும் தகவல் சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.