திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற விடமாட்டோம்: திருமாவளவன் பேச்சு
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற விடமாட்டோம்: திருமாவளவன் பேச்சு
ADDED : டிச 24, 2025 01:49 AM

மதுரை: ''மலையில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றும் பிரச்னையில் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற விடமாட்டோம்'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார்.
மதுரை பழங்காநத்தத்தில், திருப்பரங்குன்றம் பிரச்னையில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி வி.சி.க., சார்பில் ஆர்ப்பாடம் நடந்தது. இதில் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
திருப்பரங்குன்றம் பிரச்னையை பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்கின்றனர். நான் இந்த மண்ணின் மைந்தன் என்பதே போதுமான தகுதி. தமிழகத்திலும், தி.மு.க., அரசை எதிர்த்துப் போராடவும் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. பா.ஜ.,வோ, ஹிந்துஅமைப்புகளோ எளியமக்களுக்காக போராடியதுண்டா. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தி.மு.க., கூட்டணி கட்சிகள் போராடியதால்தானே 10 ஆண்டுக்குப் பின் பணிகள் துவங்கியுள்ளது.
நாங்கள் மதநல்லிணக்கத்தை விரும்புகிறோம். இங்குள்ள சிறுபான்மையினர் எங்கள் சொந்தங்கள். அவர்களை அச்சுறுத்தப் பார்க்கிறது சங்பரிவார் கும்பல். மொழிக்காக தீக்குளித்தவர்கள் உண்டு. ஆனால் மதவெறியை துாண்டி பூர்ணசந்திரனை தீக்குளிக்க வைத்தது ஆர்.எஸ்.எஸ்.,கும்பல். இங்கு ஜனநாயக சக்திகள் பெரும்பான்மையாக உள்ளோம். அதனால் திருப்பரங்குன்றத்தை அயோத்தி போல மாற்ற முடியாது. அதற்கு விடவும் மாட்டோம்.
எல்லா துறைகளிலும் சங்கிகள் குறிப்பாக நீதித்துறை, காவல்துறை, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பல வடிவங்களில் சங்கிகள் உள்ளனர். இங்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் சுவாமிநாதன் வடிவத்தில் சங்கி உள்ளனர். தி.மு.க., ஒரு தீயசக்தி என்று புதிதாக கட்சி துவக்கிய விஜய் சொல்கிறார். இதனால் நீங்கள் தி.மு.க.,வை வீழ்த்த நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்காக கட்சி தொடங்கியுள்ளீர்கள் எனப்புரிகிறது.
எங்களுக்கென கொள்கைகள் இருக்கிறது. எங்கள் கொள்கையோடு ஒத்துப்போவதால்தான் நாங்கள் தி.மு.க.,வோடு இருக்கிறோம். ஆனால் சீமானும், விஜயும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.,வின் பிள்ளைகள் என்பது அம்பலமாகி இருக்கிறது. இது தெரிந்தும் தி.மு.க..வினர் கூட வாய்மூடி மவுனியாக இருக்கலாம். ஆனால் சமூகநீதி பேசும் அம்பேத்கர் கொள்கைகளை கடைபிடிக்கும் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.
எங்களுக்கு பதவி ஆசை இல்லை. கூட்டணி கட்சியில் கிடைக்கும் 2, 4 சீட்கள் எங்களுக்கு முக்கியமில்லை. எங்களுக்கு கொள்கை, கோட்பாடுதான் முக்கியம். மதச்சார்பின்மை, அம்பேத்கர் கொள்கைக்கு எதிரிகள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., என்பதால் எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

