கோவில்களுக்கு எதிராக செயல்படுவோரை எதிர்ப்போம்: பொன் மாணிக்கவேல்
கோவில்களுக்கு எதிராக செயல்படுவோரை எதிர்ப்போம்: பொன் மாணிக்கவேல்
ADDED : டிச 08, 2024 12:53 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் சுவாமி தரிசனம் செய்த பின், வெள்ளை விநாயகர் கோயில் எதிரே அபிராமி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும், திருமண மண்டபத்துக்கான பள்ளம் தோண்டும் பணியின் போது கிடைக்கப்பட்ட மன்னர்கள் உருவம் பதித்த பழைய துாண்களை பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
கோவில்களில் திருப்பணி என்பது வேறு, புனரமைப்பது என்பது வேறு, புதுப்பித்தல் என்பது வேறு. அறநிலையத்துறையானது புதுப்பித்தல் என்ற பெயரையே உபயோகம் செய்கிறது. இது தவறான வார்த்தை. புனரமைப்பது என்பதே சரியான சொல். 100 ஆண்டுகள் பழமையான கோவில்களை அறநிலையத் துறை புனரமைப்பு செய்ய உரிமை கிடையாது. சட்ட ரீதியாக தொல்லியல் துறை தான் இந்த பணிகளை மேற்கொள்ள முடியும்.
ஆனால் 600 ஆண்டுகள் பழமையான திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலை முழுமையாக இடித்துவிட்டு, 2013 முதல் 2016ம் ஆண்டு வரை நவீன முறையில் கட்டப்பட்டிருக்கிறது. திண்டுக்கல்லில் உள்ள அபிராமி அம்மன் கோவிலை புனரமைப்பு செய்யவில்லை. புதுப்பித்தல் செய்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஹிந்து கோவில்களுக்கு எதிராக செயல்படுவோரை எதிர்க்க தயங்க மாட்டோம். திண்டுக்கல் மலைக்கோட்டையிலுள்ள கோவிலில் தெய்வ சிலைகளை மீண்டும் பிரதிஷ்டை செய்ய முடியாத விவகாரம் இங்குள்ள ஹிந்துக்களுக்கு அவமானம்.
கோவில் வளாகத்துக்குள் அலுவலகம், கழிப்பறையை கட்டி பயன்படுத்துகின்றனர். அலுவலகத்துக்கான வாடகை பணம் அறநிலைத் துறை சார்பில் கோவிலுக்கு செலுத்தப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் உடனிருந்தார்.