அரபிக்கடலில் புயல்; வங்கக்கடலில் சுழற்சி: ஒரு வாரத்திற்கு கனமழை தொடரும்
அரபிக்கடலில் புயல்; வங்கக்கடலில் சுழற்சி: ஒரு வாரத்திற்கு கனமழை தொடரும்
ADDED : அக் 11, 2024 06:29 AM

சென்னை : ''தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை தொடர வாய்ப்புள்ளது,'' என, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவுகிறது. இது மேலும் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அத்துடன், தெற்கு வங்கக்கடலின் மைய பகுதியில், நாளை புதிதாக வளி மண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இந்த இரண்டு சுழற்சிகள், காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறலாம். இது, வடகிழக்கு பருவமழையின் துவக்கமாகவும் இருக்கலாம்.
வடமேற்கு மாநிலங்களில், தென்மேற்கு பருவக்காற்று விலகி வருகிறது. பிற மாநிலங்களிலும், தென்மேற்கு பருவக்காற்று விலகி, கிழக்கு திசை காற்று வீசும்போது, வடகிழக்கு பருவமழை துவங்கும்.
அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வய்யப்புள்ளது. அக்., 13, 14ல் உள் மாவட்டங்கள், வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.