ADDED : ஆக 30, 2026 05:30 AM

இன்ஜினியருக்கு சபாஷ்
நே பாள பெருவெள்ளத்தில் சுற்றியுள்ள அனைத்து கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும், நுவாகட் மாவட்டத்தில் ஒரே ஒரு மாடி வீடு மட்டும் உறுதியுடன் நின்ற வீடியோ உலகளவில் வேகமாக பரவி வருகிறது. சுற்று வட்டாரப் பகுதிகளில், அந்த மாடி வீட்டில் வசித்த குடும்பத்தினர் மட்டுமே உயிர் தப்பியுள்ளனர். அசுர பலம் கொண்ட ஆற்று வெள்ளத்தின் அழுத்தத்தைத் தாங்கி நின்ற அந்த வீட்டின் வீடியோவை பகிரும் நெட்டிசன்கள், கட்டிய இன்ஜினியரை மனதார பாராட்டி வருகின்றனர்.
நல்லா இருக்கும்தான்!
ஆ ஸ்திரேலியாவில் வேலை பார்க்கும் இந்தியர் சர்தக் திங்ரா, மாத சம்பளத்துக்கு பதிலாக, 15 நாளுக்கு ஒரு முறை சம்பளம் பெற்றால் நன்றாக இருக்கும் என வெளியிட்ட வீடியோ, 'டிரெண்டிங்'கில் உள்ளது. 'மாதம் 2 முறை சம்பளம் பெறுவது, சரியாக நிதி நிர்வாகம் செய்ய வசதியாக உள்ளது. கணக்குப் போட்டு பாருங்கள்; ஆண்டுக்கு 24 முறை சம்பளம் கிடைக்கும்' என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் சர்தக்.
'டாகேஷ் பாய் சில்லிங்'
வெ ள்ளை நிற தெரு நாய் ஒன்று, தன் முன்னங்கால்களை மட்டும் ஆற்று நீரில் வைத்தபடி, ஜாலியாக படுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலம் லலித் நேகி பகிர்ந்த இந்த வீடியோவை பார்த்த இணையதள பிரியர்கள், 'டாகேஷ் பாய்' என்றும், 'டாகேஷ் ப்ரோ' என்றும் குறிப்பிட்டு, 'சில்லிங்' செய்வதாக கூறி கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
'அக்கா கையால்'
தம்பிக்கு ராக்கி!
மு ம்பையை சேர்ந்த அனம்தா அஹ்மத், 17, ஒவ்வொரு ஆண்டும் ரக் ஷா பந்தனுக்கு குஜராத் மாநிலம், வல்சாத் செல்கிறார். 2022ல் சிறுமியாக இருந்தபோது, மின் தாக்குதலுக்கு ஆளான அனம்தாவின் கை துண்டிக்கப்பட்டது. ஒரு கையில் எல்லா வேலையும் செய்ய அனம்தா பழகிக் கொண்டார். இரண்டு ஆண்டுகள் அப்படியே சென்றன. இந்த நேரத்தில்தான், குஜராத்தில் 9 வயது சிறுமி ரியா உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகளை, குடும்பத்தினர் தானம் செய்தனர். அவரது கை, அனம்தாவுக்கு பொருத்தப்பட்டது.
இதன் மூலம், இரு குடும்பத்தினரும் நெருக்கமாகினர். ஆண்டு தோறும் ரியாவின் இளைய சகோதரன் சிவம் மிஸ்திரிக்கு, ரக் ஷா பந்தன் முன்னிட்டு, ராக்கி கட்டுகிறார் அனம்தா. இந்தாண்டு மும்பையில் இருந்து குஜராத் சென்ற அனம்தா, சிவம் மிஸ்திரிக்கு ராக்கி கட்டிய செய்தி, இணையத்தில் அதிகம் பேரைக் கவர்ந்துள்ளது.
'இந்தியா தான்
சொர்க்கம்!'
டா க்டர் தீபாஞ்சலி சர்மா, பிரிட்டனில் இருக்கும் மருத்துவ வசதிகளை இந்தியாவுடன் ஒப்பிட்டு பகிர்ந்த வீடியோ, இணையத்தில், 'டிரெண்டிங்'கில் உள்ளது. உடல் நலம் பாதித்த தன் கணவருக்கு இரவு நேரத்தில் இந்தியாவில் உடனடி சிகிச்சை கிடைத்ததை குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார்.
பிரிட்டன் தேசிய மருத்துவ சேவை அமைப்பில் பணியாற்றிய அவர், 'பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில், இந்தியாவில் கிடைப்பதை போன்ற மருத்துவ வசதிகள் உடனடியாக கிடைக்காது. அது எத்தனை சிரமம் என்பதை, அங்கு டாக்டராக பணியாற்றிய வகையில் நான் அறிவேன்.
'வெளிநாட்டுக்கு செல்வது, சுகபோகமான விஷயம் என்று நினைப்பவர்கள் இருந்தால், அது உண்மையல்ல என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அங்கே பல சவால்கள் உள்ளன. இந்தியாவில் நாம் சாதாரணமாகக் கருதும் பல விஷயங்கள், அங்கே பெரும் சிக்கல்களாக உருவெடுக்கின்றன. இந்தியாவில் வாழ்வது ஒரு குறைபாடு என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்' என்று கூறியுள்ளார் தீபாஞ்சலி.
