ADDED : செப் 10, 2025 06:57 AM

சென்னை; த.வெ.க., தலைவர் விஜய், சனிக்கிழமைதோறும், 'வீக் எண்ட்' பிரசாரம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு அனுமதி கிடைக்காவிட்டால், நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளார்.
த.வெ.க.,வில், 120 மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாவட்டங்களில், தன் மக்கள் சந்திப்பு பயணத்தை, அவர் துவங்கவுள்ளார். வரும் 13ம் தேதி சனிக்கிழமை, திருச்சி, பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில், அவர் தன் சுற்றுப்பயணத்தை துவங்குகிறார்.
பிரசாரத்தின்போது, மாவட்ட நிர்வாகிகள் எப்படி தொண்டர்களை வழிநடத்த வேண்டும் என்பது குறித்து, மாவட்டச் செயலர்களுக்கு, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
சனிக்கிழமை மட்டும் இதை தொடர்ந்து, வரும் 20ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை; 27ம் தேதி திருவள்ளூர், வடசென்னை மாவட்டங் களில், அவர் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார்.
பின், அக்டோபர் 4, 5ம் தேதிகளில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு; 11ல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி; 18ல், காஞ்சிபுரம், வேலுார், ராணிப்பேட்டை; 25ல் தென்சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரசாரம் செய்யவுள்ளார்.
வரும் நவம்பர் 1ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார்; 8ல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்; 15ல் தென்காசி, விருதுநகர்; 22ல் கடலுார்; 29ல் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.
தொடர்ந்து, டிசம்பர் 6ல் தஞ்சாவூர், புதுக்கோட்டை; 13ல் சேலம், நாமக்கல், கரூர்; 20ல் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.
வரும் 13 முதல் டிசம்பர் 20 வரைக்கும் வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் மட்டும், தன் தேர்தல் பிரசாரத்தை விஜய் மேற்கொள்ள உள்ளார்.இந்த பிரசாரத்திற்கு திருச்சியில் அனுமதி கேட்ட த.வெ.க.,வினர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மல்லுக்கட்டு மேலும், மற்ற மாவட்ட போலீசாரும் அனுமதி தராமல் இழுத்தடிக்க வாய்ப்புள்ளது. இதனால், நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற, த.வெ.க., தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து, த.வெ.க., தரப்பில் கூறியதாவது:
நடிகர் விஜய், கட்சி துவங்கியதில் இருந்து எந்த பொது நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தாலும், அனுமதி பெறுவதற்கு ஆளும் தரப்போடு மல்லுக்கட்ட வேண்டியுள்ளது. எந்த பொது நிகழ்ச்சிக்கும், கேட்டதும் போலீஸ் தரப்பில் அனுமதி கொடுப்பதில்லை.
அதே மாதிரிதான், பிரசார சுற்றுப்பயணத்துக்கும் தற்போது அனுமதி மறுக்கின்றனர். அதனால், சனிக்கிழமைதோறும் பிரசார பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
அப்படி செய்தாலே, தமிழக அரசியலில் தன்னால் பெரும் மாற்றத்தை உருவாக்கிவிட முடியும் என்றும் நம்புகிறார். அந்த அடிப்படையிலேயே, 'வீக் எண்ட்' பிரசார பயண திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தேவையானால், பிரசார பயண திட்டம் மாற்றி அமைக்கப்படலாம்.
இவ்வாறு அத்தரப்பில் கூறினர்.