மது விலக்குப்பிரிவு என்ன செய்கிறது? கள்ளச்சாராய வழக்கில் ஐகோர்ட் கேள்வி
மது விலக்குப்பிரிவு என்ன செய்கிறது? கள்ளச்சாராய வழக்கில் ஐகோர்ட் கேள்வி
ADDED : டிச 18, 2024 12:58 PM

சென்னை: 'பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது என்றால் அதனை தடுக்காமல் மது விலக்குப்பிரிவு என்ன செய்கிறது?' என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில், கடந்த ஜூன் 19ல் கள்ளச்சாராயம் குடித்து, 67 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில், கலெக்டர், கூடுதல் டி.ஜி.பி., -- எஸ்.பி., ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி எஸ்.பி., எஸ்.பி., உள்ளிட்ட ஒன்பது போலீஸ் அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ., தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி, கடந்த நவ., 20ல் உத்தரவிட்டது. சி.பி.ஐ., விசாரிக்க தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம்கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு இன்று (டிச.,18) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கள்ளச்சாராய மரணத்தால் பதற்ற நிலை உருவானதால், 18 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்' என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஐகோர்ட் நீதிபதிகள், 'பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது என்றால் அதனை தடுக்காமல் மது விலக்குப்பிரிவு என்ன செய்கிறது?' என கேள்வி எழுப்பினர். அனைத்து மனுக்கள் மீதும் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதால் ஜன.,6ம் தேதி, இறுதி விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.