கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் கட்சிகளின் நிலைப்பாடு என்ன: உயர்நீதிமன்றம் உத்தரவு
கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் கட்சிகளின் நிலைப்பாடு என்ன: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 07, 2025 08:15 AM

மதுரை: கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தடை கோரிய வழக்கில், அதில் இணைந்து இடையீட்டு மனு தாக்கல் செய்த அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் ரோடு ஜெயம் தியேட்டர் எதிரே பஸ் ஸ்டாப்பில் அ.தி.மு.க.,கொடிக் கம்பம் நட அனுமதிக்க உத்தரவிட அதன் நிர்வாகி கதிரவன் மனு தாக்கல் செய்தார். ஜன.,27 ல் நீதிபதி ஜி.கே.இளந்திரையன்,'தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், அரசின் பிற துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்.
மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டார். 'மார்க்சிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பங்களை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்,' என அதன் மாநில செயலாளர் சண்முகம் மனு செய்தார். ஜூன் 20 ல் நீதிபதி சி.சரவணன் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சண்முகம் மேல்முறையீடு செய்தார்.
ஜூலை 22ல் 3 நீதிபதிகள் அமர்வு,'விருப்பமுள்ள கட்சிகள் விளக்கமளிக்கும் வகையில் இவ்வழக்கில் இணைத்துக் கொள்ள இடையீட்டு மனுக்களை ஆக.,5க்குள் தாக்கல் செய்ய வேண்டும். கொடிக் கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர வேண்டும்,' என உத்தரவிட்டு ஆக.6க்கு ஒத்திவைத்தனர்.
இவ்வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள அ.தி.மு.க.,-ம.தி.மு.க.,-- இந்திய கம்யூ.,-த.வெ.க., உள்ளிட்ட சில கட்சிகள், அமைப்புகள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.விஜயகுமார், எஸ்.சவுந்தர் அமர்வு நேற்று விசாரித்தது.
நீதிபதிகள்: கட்சிகளின் கொள்கைகளை பரப்பும் வகையில் கொடிக்கம்பங்களை நிறுவ அடிப்படை உரிமை உள்ளது. கட்சி அலுவலகம், கட்சி தலைவரின் வீடு உள்ளிட்ட இடங்களில் கொடிக்கம்பங்களை நிறுவ கட்டுப்பாடு இல்லை. குறிப்பிட்ட பகுதியில் பூங்காக்கள்போல் அமைத்து சிலைகள், கொடிக்கம்பங்களை நிறுவலாம். இதன் மூலம் கட்சிகளின் வரலாறு, கொள்கைகளை இளையதலைமுறையினர் அறிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.
சிலைகளை அகற்றி குறிப்பிட்ட இடத்தில் பூங்காபோல் அமைத்து அங்கு நிறுவ ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை அரசு நிறைவேற்றவில்லை. கொடிக்கம்பங்களின் அளவு, உயரம், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது. இவ்விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து அறிய வேண்டியுள்ளது.
தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன்: தனி நீதிபதியின் உத்தரவுப்படி மதுரையில் கொடிக்கம்பங்களில் 99 சதவீதம் அகற்றப்பட்டுள்ளது.
மற்ற இடங்களில் இந்த அமர்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவால் அகற்றப்படவில்லை. இவ்விவகாரத்தில் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு குறித்து அரசு அறிய விரும்புகிறது. அதை பரிசீலித்து ஒழுங்குபடுத்துவது குறித்து முடிவுக்கு வர இயலும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ள அரசியல் கட்சிகள் தங்கள் தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக சுருக்கமாக ஆக.,12க்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் அரசின் நிலைப்பாடு குறித்து கருத்து கோரப்படும். விசாரணை ஆக.,13க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.