கட்சி கொடி கம்பங்களை அகற்றுவதில் என்ன சிக்கல்? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
கட்சி கொடி கம்பங்களை அகற்றுவதில் என்ன சிக்கல்? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
UPDATED : ஜூலை 03, 2025 01:42 AM
ADDED : ஜூலை 03, 2025 12:54 AM

சென்னை:'சென்னை மாநகரில் 31.94 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன; கொடிக் கம்பங்கள் அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை முழுமையாக செயல்படுத்துவதில் என்ன சிக்கல்' என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர்கள் கதிரவன் மற்றும் சித்தன் ஆகியோர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மாவட்டத்தில் இரு இடங்களில் அ.தி.மு.க., கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தனர்.
அறிக்கை தாக்கல்
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்கள், ஏப்., 28க்குள் அகற்றப்பட வேண்டும்' என கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் கோபிநாத் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது குறித்து, மாவட்ட வாரியான விபரங்கள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
அரியலுார், செங்கல்பட்டு, கரூர், கடலுார், நாகை உட்பட 19 மாவட்டங்களில், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்கள் 100 சதவீதம் அகற்றப்பட்டு உள்ளன.
கோவை, வேலுார், திருவாரூர், சேலம் உட்பட 11 மாவட்டங்களில், 90 சதவீதத்துக்கு மேல் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஏழு மாவட்டங்களில், 50 முதல் 90 சதவீதம் வரை கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளன. சென்னையில் 31.94 சதவீதம் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளன.
கொடிக் கம்பங்கள், சிலைகள் நிறுவுவது தொடர்பாக, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளன. இவற்றை இறுதி செய்வது தொடர்பாக, தலைமை செயலர் தலைமையில் வரும் 8ம் தேதி கூட்டம் நடக்க உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கால அவகாசம்
அதை தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, 'பொது இடங்களில் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு, வாடகை வசூலித்தது குறித்தும், மற்ற இடங்களில் கொடிக் கம்பங்களை முழுமையாக அகற்றியது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய, நான்கு வார கால அவகாசம் வழங்க வேண்டும்' என கோரினார்.
இதையடுத்து நீதிபதி கூறியதாவது:
கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. நீதிமன்ற உத்தரவுபடி, 19 மாவட்டங்களில் மட்டுமே முழுமையாக கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.
மீதமுள்ள 19 மாவட்டங்களில் முழுமையாக கொடிக் கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
சென்னை மாநகரில் 31.94 சதவீதம் மட்டுமே கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளதே ஏன்?
சென்னையில் நீதிமன்ற உத்தரவை 100 சதவீதம் அமல்படுத்துவதில் என்ன சிக்கல்?
சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் கொடிக் கம்பங்கள் நட, அரசு ஏன் அனுமதி அளிக்கிறது?
இது மிகவும் அபாயகரமானது. இதனால், பொது மக்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படும். மனித உயிர்களுக்கு உரிய மதிப்பு அளிக்க மாட்டீர்களா?
இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின், அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று, வரும் 24ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.
'இந்த காலத்துக்குள், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை முழுமையாக அகற்றாத கலெக்டர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்' என, நீதிபதி எச்சரித்தார்.