தடகள வீரரை கொலையாளியாக்கிய 'கொள்கை' எது? போலீசார் கவனம் செலுத்த வேண்டியது அதில்தான்!
தடகள வீரரை கொலையாளியாக்கிய 'கொள்கை' எது? போலீசார் கவனம் செலுத்த வேண்டியது அதில்தான்!
UPDATED : ஆக 01, 2025 02:39 PM
ADDED : ஜூலை 31, 2025 06:59 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஐ.டி., ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் சிறந்த தடகள வீரராக இருந்திருக்கிறார். அவர் கொலையாளியாக மாற காரணமாக இருந்த கொள்கை எது என போலீசார் விசாரித்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை தமிழ்ச்செல்வியின் மகன் கவின் 27, சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தூத்துக்குடியில் பள்ளியில் பயிலும் போது உடன் படித்த பிளஸ் 2 மாணவியை காதலித்தார்.
காதலி தற்போது திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் சித்தா டாக்டராக பணிபுரிகிறார். அந்த மருத்துவமனைக்கு வந்த கவின் காதலியின் தம்பி சுர்ஜித் 24, அழைத்துச் சென்று கடந்த 27ம் தேதி வெட்டிக் கொலை செய்தார். கவின் பட்டியல் இனத்தவர். அவரது காதலி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். ஜாதி ரீதியான எதிர்ப்பினால் சுர்ஜித் இந்த கொலையை செய்திருந்தார்.
சுர்ஜித்தின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருவரும் போலீசில் எஸ்.ஐ.,யாக உள்ளவர்கள். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ., க்கு மாற்ற வேண்டும் என கவினின் தந்தை சந்திரசேகர் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சுர்ஜித்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டார்.
அதலெட்டிக் முதல் அரிவாள் வரை...
சுர்ஜித் பி.காம்., படித்துள்ளார். பள்ளிக்காலத்திலிருந்தே சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்துள்ளார். தடகள போட்டிகளில் மாநில சாம்பியனாகவும், பல கோப்பைகள் கேடயங்களையும் குவித்துள்ளார். ஆனால் கல்லுாரி படிப்பு முடிந்ததும் ஜிம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். அதே சமயம் அவர் அரிவாள், ஆயுதங்களுடன் போஸ் கொடுக்கும் படங்களும் உள்ளன.
கவினுக்கும் சுர்ஜித்தை நீண்ட காலமாக தெரியும். எனவேதான் சுர்ஜித் அழைத்ததும் மறுப்பு தெரிவிக்காமல் சென்றுள்ளார். ஆனால் அவர் மீது மிளகாய் பொடி தூவி சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தார். ஆயுதங்கள் அரிவாள்களுடன் படங்கள் வெளியிடுவோர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்து எச்சரிக்கின்றனர்.
ஆனால் தந்தை, தாய் இருவரும் போலீசாக பணியாற்றுவதால் சுர்ஜித்தின் அரிவாள் படங்களை போலீசாரும் கண்டு கொள்ளவில்லை. பெற்றோரும் கவனிக்கவில்லை. தடகளத்தில் மாநில சாம்பியனாக திகழ்ந்த சுர்ஜித் கைகளில் அரிவாள் பிடிக்க வைத்த 'கொள்கை' தான் அவரை கொலைக்கு இட்டுச்சென்றுள்ளது.
தாமிரபரணி தாலாட்டும் பசுமை மிக்க திருநெல்வேலியை ரத்தபூமியாக மாற்றி வரும் ஜாதி அமைப்புகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லையில் விஷமாக பரவி வரும் ஜாதி கலாசாரம் ஒரு தடகள வீரரை கொலையாளியாக மாற்றியுள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போலீசாரின் கையில் தான் உள்ளது.