'ஜெயலலிதா படத்தை என்ன செய்வாய்?' தாய் கேட்டதால் மனம் மாறிய 'மாஜி'
'ஜெயலலிதா படத்தை என்ன செய்வாய்?' தாய் கேட்டதால் மனம் மாறிய 'மாஜி'
ADDED : ஜன 23, 2026 06:52 AM

பெரம்பலுார்: தி.மு.க.,வில் இணையப் போவதாக அறிவித்த பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், பொது வாழ்வில் இருந்து விலகப் போவதாக திடீரென அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை துவக்கினார். அதன் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து, சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்த வைத்தி லிங்கத்தின் ஆதரவாளர், ராமச்சந்திரன்.
குன்னம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வான அவர், நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ''எனக்கு வழிகாட்டியாக விளங்கிய வைத்தி லிங்கம் வழியில், நானும் தி.மு.க.,வுக்கு செல்ல உள்ளேன். வரும் 26ம் தேதி, தி.மு.க.,வில் இணைவேன்,” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராமச்சந்திரன் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், 'இனி பொதுவாழ்வில் இருந்து விலகிக் கொள்ள போகிறேன்' என கூறியுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: தி.மு.க.,வில் இணையப் போவதாக கூறியதும் குடும்ப உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். என் தாய், 'வீட்டில், இத்தனை காலம் ஜெயலலிதா படத்தை வைத்து தெய்வமாக மதித்து வணங்கிவிட்டு, இனி என்ன செய்யப் போகிறாய்?' என கேட்டார்.
என் மகளோ, 'இப்படி யெல்லாம் கட்சி மாறி செல்ல, அசிங்கமாக இல்லையா?' என கேட்டார். கட்சி மாற வேண்டும் என்றதும், வீட்டுக்குள்ளேயே இப்படியொரு எதிர்ப்பு கிளம்பியதால் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இரவு முழுதும் துாக்கம் இல்லை. அதனால், பொதுவாழ்வில் இருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்துள்ளேன். எந்த அரசியல் கட்சியிலும், இனி இணையப் போவதும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

