பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்ததும் தி.மு.க., ஊழல்கள் வெளியே வரும்: சொல்கிறார் எச்.ராஜா
பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்ததும் தி.மு.க., ஊழல்கள் வெளியே வரும்: சொல்கிறார் எச்.ராஜா
ADDED : அக் 05, 2024 06:11 AM

திருநெல்வேலி: ''2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ., தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் போது தி.மு.க., ஊழல்கள் வெளியே கொண்டு வரப்படும். அரசுக்கு மது மூலம் கிடைக்கும் ரூ.48 ஆயிரம் கோடியை மத்திய அரசு தர வேண்டும் என கோருவதற்கும் மத்திய அரசின் மீது பழி போடுவதற்குமே மதுவிலக்கை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்ற போலி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்,'' என, திருநெல்வேலியில் பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பிரதமருக்கு இந்நிதியை தர கடிதம் அனுப்பியிருந்தார். மத்திய அமைச்சரவை இந்நிதியை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழக பா.ஜ., இதனை வரவேற்கிறது.
தமிழகத்தில் ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது வரவேற்கதக்கது. அக்டோபர் 2ல் நாடக மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. நோ பால் போட்டு ரன் எடுப்பது போல் அந்த மாநாடு நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த மாநாட்டில் தி.மு.க., வி.சி.க.,வின் கூட்டணி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறந்தது மாநில அரசு. மது கடைகள் தொடர்பான சட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மதுவிலக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் கிடையாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரசசனைகளுக்காக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று அதற்கான தடைகளை நீக்கியது.
மத்திய அரசு மதுவிலக்கு சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது போலி நாடகம். மது மூலமாக மாநில அரசுக்கு கிடக்கும் ரூ.48 ஆயிரம் கோடியை மத்திய அரசு தர வேண்டும் என கோரவும், மத்திய அரசின் மீது பழி போடவும் போலி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.
தி.மு.க., தலைவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்ததாக கைது செய்யப்படுகின்றனர். தி.மு.க.,வில் போதை பொருள் அணி என்ற அணியை உருவாக்க வேண்டும். தமிழ் சமூகத்தை அழித்துக் காட்டுவோம் என்று திட்டமிட்டு செயல்படுத்தும் தீய சக்தியாக தி.மு.க., செயல்படுகிறது. 4 லட்சத்து 76 ஆயிரத்து 581 ஏக்கர் கோயில் நிலங்கள் இருப்பதாக கூறிவரும் அமைச்சர் சேகர்பாபு வெள்ள அறிக்கை மூலம் அதனை மக்களிடம் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.