ADDED : மே 18, 2025 03:30 AM

சென்னை: 'டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு உள்ளிட்ட இடங்களில், இரண்டாவது நாளாக நடக்கும் அமலாக்கத் துறை சோதனை நடத்துவது குறித்து, முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்?' என, அ.தி.மு.க., கேள்வி எழுப்பியுள்ளது.
அ.தி.மு.க., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு உள்ளிட்ட இடங்களில், அமலாக்க துறையின் சோதனை இரண்டாவது நாளாக தொடர்கிறது. இந்த சோதனை குறித்து, இன்னும் முதல்வர் ஸ்டாலின் ஏதும் கூறாமல் மவுனமாக இருக்கிறார்; இது ஏன்?
தன் குடும்பத்தைச் சார்ந்தவர் வீட்டிலும், தனக்கு நெருக்கமானவர் வீட்டிலும் நடக்கும் 'ரெய்டு' பற்றி ஏன் பேச மறுக்கிறார்; ரித்தீஷ் எங்கே இருக்கிறார்; துபாய் சென்று விட்டதாக வரும் செய்திகள் உண்மையா? அப்படியென்றால், ரெய்டு வருமோ என்ற அச்சத்தில் தலைமறைவானாரா ரித்தீஷ்?
முதல்வராலும், அவரது மகனாலும், 'தம்பி' என்று அன்போடு அழைக்கப்படும் ரித்தீஷின் வேலை என்ன? 'யார் அந்த சார்?' என்று கேட்டோம்-, பதில் வரவில்லை. யார் அந்த தியாகி? என்று கேட்டோம்; தமிழகத்திற்கே தெரிந்த பதில் என்றாலும், முதல் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.இப்போது கேட்கிறோம்- யார் அந்த தம்பி; எப்படி வந்தது இந்த தம்பிக்கு இவ்வளவு அதிகாரம்? இந்த தம்பி கைதாகும்போது, தம்பியின் வசம் உள்ள தி.மு.க.,வின் குடுமி சிக்கும். அப்போது பேசித்தானே ஆக வேண்டும் முதல்வரே.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.