சொலிசிட்டர் ஜெனரல் ராஜினாமா ஏற்பு எப்போது? : மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
சொலிசிட்டர் ஜெனரல் ராஜினாமா ஏற்பு எப்போது? : மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
ADDED : ஜூலை 12, 2011 01:09 AM
புதுடில்லி : சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தின் ராஜினாமாவை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து, அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவு எடுக்கப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் போது, மத்திய அரசு சார்பில், கோபால் சுப்பிரமணியத்திற்கு பதில், சீனியர் வழக்கறிஞர் ரோகிங்டன் நாரிமன் ஆஜராவார் என, கூறப்பட்டது.
வழக்கமாக மத்திய அரசின் சார்பில் ஆஜராகி வாதாடி வந்த தனக்கு தகவல் தெரிவிக்காமல், ரோகிங்டனை, அரசு சார்பில் வாதாட நியமித்ததை எதிர்த்து, சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் நேற்று முன்தினம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பினார். ஆனால், இவரது ராஜினாமாவை அரசு இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. ராஜினாமாவை முடிவை மறுபரிசீலனை செய்யும்படி, கோபால் சுப்பிரமணியத்தை பிரதமர் மன்மோகன் சிங்கும் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், நேற்று, பெங்களூரிலிருந்து டில்லி வந்த சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து சொலிசிட்டர் ஜெனரல் விவகாரம் குறித்துப் பேசினார். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: கோபால் சுப்பிரமணியத்தின் ராஜினாமாவை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து, அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மத்திய அரசு முடிவெடுக்கும். பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டும், சொலிசிட்டர் ஜெனரல், தன் ராஜினாமா முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த, சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, சொலிசிட்டர் ஜெனரலிடமும் மூன்று முறை பேசியுள்ளார். ராஜினாமாவை வாபஸ் பெறும்படி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சர் கபில் சிபலுக்கு எதிரான வழக்கில் ஆஜராகவே, சிறப்பு வழக்கறிஞரான ரோகிங்டன் நாரிமன் தேர்வு செய்யப்பட்டார். தற்போது கபில்சிபலுக்கு எதிரான பொதுநல வழக்கில், எந்த உத்தரவும் பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டதால், பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது. ரோகிங்டன், சட்ட அமைச்சகத்தின் வழக்கறிஞர்கள் குழுவில் உள்ளதால், கபில் சிபலுக்கு எதிரான வழக்கில் மட்டும் ஆஜராக கடந்த 9ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

