ADDED : ஜன 24, 2026 06:14 AM

சென்னை: “மதுரையில், கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது திறக்கப்படும்,” என, துணை முதல்வர் உதயநிதி கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
துணை முதல்வர் உதயநிதி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்ட, கடந்த 2019ல், பிரதமர் மோடி ஒற்றை செங்கலை எடுத்து வைத்தார். அதன்பின் எந்த பணியும் நடக்கவில்லை. இப்போதும் கட்டிக் கொண்டிருக்கின்றனர். அது எப்போது திறக்கப்படும் என்பதை, கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.,வினர் கேட்டுச் சொல்ல வேண்டும்.
அ.தி.மு.க., - உதயகுமார்: மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை போராடி பெற்றுத் தந்தது, அ.தி.மு.க.,தான்.
அமைச்சர் மூர்த்தி: அ.தி.மு.க., ஆட்சியில், புதுக்கோட்டையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மதுரையில் அனைத்து தரப்பினரும் இணைந்து போராட்டம் நடத்தியதால்தான், அங்கு மாற்றப்பட்டது. மதுரைக்கு எய்ம்ஸ் வந்ததற்கு தி.மு.க.,வுக்கும் முக்கிய பங்குண்டு.
உதயகுமார்: அ.தி.மு.க., ஆட்சியில்தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஒதுக்கப்பட்டது; அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் முடிக்கப்பட்டு, வரப்போகும் அ.தி.மு.க., ஆட்சியில் எய்ம்ஸ் திறக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

