ஓய்வூதிய உயர்வு எப்போது? சத்துணவு ஊழியர்கள் கேள்வி
ஓய்வூதிய உயர்வு எப்போது? சத்துணவு ஊழியர்கள் கேள்வி
ADDED : ஜூன் 28, 2026 12:31 AM
சென்னை: 'தி.மு.க., அரசு அறிவித்த, ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட பணப்பலன்கள் எப்போது கிடைக்கும்' என, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை, 2,000த்தில் இருந்து, 3,400 ரூபாயாக உயர்த்தி, கடந்த ஜனவரி, 24ம் தேதி, அப்போதைய முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
இவற்றுடன் பணிக்கொடையை, ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சம் ரூபாயாகவும், ஈமச்சடங்கு செலவாக, 20,000 ரூபாய் வழங்குவது உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
இதற்கான அரசாணை கடந்த பிப்., 13ல் வெளியானது. மேலும், பிப்., 2026 முதல், இந்த சலுகைகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் என, சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
அரசாணை வெளியாகி நான்கு மாதங்களாகியும், உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை, தமிழக அரசு செயல்படுத்தாமல், மவுனமாக இருப்பதாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக் கான, ஓய்வூதியம், பணிக் கொடை உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கான நிதியை உயர்த்தி, கடந்த ஜனவரியில் தி.மு.க., அரசு அறிவித்தது. இதற்கான அரசாணை வெளியாகி, நான்கு மாதங்களாகியும், அவற்றை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் முன்வரவில்லை.
'நிதி இல்லை, மாவட்டங்களுக்கு நிதி அனுப்பப்பட்டு உள்ளது' உட்பட பல்வேறு காரணங்களை கூறி, சமூக நலத்துறை அதிகாரிகள், எங்களை அலைக்கழித்து வருகின்றனர்.
தி.மு.க., அரசின் அறிவிப்பு என்பதால், த.வெ.க., அரசு செயல்படுத்தவில்லையோ என்ற கேள்வி எழுகிறது. இப்பிரச்னையில் முதல்வர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
