ADDED : அக் 16, 2024 01:56 AM
மதுரை,:தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் எனும் ஆர்.டி.இ., கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் மாணவர் சேர்க்கைக்கான கட்டணத்தை அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டும் இன்னும் பள்ளிகளுக்கு விடுவிக்கப்படவில்லை என புகார் எழுந்து உள்ளது.
மத்திய அரசின் இச்சட்டத்தின் கீழ், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் துவக்க வகுப்புகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க வேண்டும். இந்த இலவச சேர்க்கைக்கான மாணவர் கல்விக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசு வழங்கும்.
இதுகுறித்து 2023 - 2024ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டு, 2 மாதங்களுக்கும் மேல் ஆகிறது. பள்ளிகளுக்கு கட்டணத் தொகை இன்னும் விடுவிக்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட பிரச்னைகளால், ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் தடுமாறுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து, தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'பெப்சா' மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:
நிதி நெருக்கடி ஏற்பட்டு அடிப்படை கட்டமைப்பு பணிகளை பள்ளிகளில் மேற்கொள்ள முடியவில்லை. வங்கிகளில் கடன் பெற்றதற்கான இ.எம்.ஐ., செலுத்த முடியாமலும் பள்ளிகள் தடுமாறுகின்றன. விரைவில் இக்கட்டணத் தொகையை பள்ளிகளுக்கு விடுவித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.