யார் அந்த சார்? நேர்மையான விசாரணை தேவை; அரசுக்கு திருமா வலியுறுத்தல்!
யார் அந்த சார்? நேர்மையான விசாரணை தேவை; அரசுக்கு திருமா வலியுறுத்தல்!
ADDED : ஜன 02, 2025 11:21 AM

சென்னை: அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வழக்கில், யார் அந்த சார்? என்பது குறித்து நேர்மையான விசாரணை தேவை என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மலேசியா பினாங்கு பகுதியில் ஜனவரி 4,5ம் தேதிகளில் உலக தமிழர் வம்சாவளி மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு நான் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்கிறேன். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அவ்வப்போது நடந்துள்ள சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைக் கட்சி தமிழக அரசிற்கு, சுட்டிக்காட்டி இருக்கிறோம்.
அந்த வகையில், அண்ணா பல்கலை., வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய, குற்றவாளி கைது செய்யப்பட்டு இருந்தாலும் கூட, அந்த குற்றச்செயல் அதிர்ச்சியையும், பெரும் வேதனையையும் உருவாக்கி இருக்கிறது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலை., வளாகம் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
பிணை வழங்காதீங்க
 
இந்த வழக்கை பொறுத்தவரையில், கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி, ஒரு சிலர் அதிலே ஈடுபட்டு இருக்க கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. ஆகவே அரசு, குறிப்பாக போலீசார் நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாக பிணை வழங்க கூடாது. அவரை சிறையில் அடைத்த படியே, புலன் விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து வழக்கு விசாரணையையும் முடித்து தண்டனை வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
யார் அந்த சார்? என்பது குறித்து நிருபர்கள் எழுப்பி கேள்விக்கு, 'நேர்மையான விசாரணை தேவை. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்' என திருமாவளவன் பதில் அளித்தார்.
வாய்ப்பு வழங்கணும்!
 
போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'பல்வேறு இயக்கங்களுக்கு அனுமதி வழங்கி போராட்டங்கள் நடந்திருக்கின்றன. முழுவதுமாக அனுமதி மறுக்கப்படவில்லை.  இதே பிரச்னைக்கு பலர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
ஆனால் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று சிலர் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என அரசு முற்றுப்புள்ளி வைப்பதாக தெரிகிறது. எதுவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு போராடுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்  என்பதுதான் விடுதலை சிறுத்தை வேண்டுகோள். இவ்வாறு திருமாவளவன் பதில் அளித்தார்.

