UPDATED : டிச 08, 2024 08:04 PM
ADDED : டிச 08, 2024 07:22 PM

கோவை: '' விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் கட்டுப்பாட்டில் இல்லை. அக்கட்சியின் தலைவர் திருமாவளவனா அல்லது ஆதவ் அர்ஜூனா '', என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
அர்பன் நக்சல்
கோவையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆனந்த் டெல்முடே ஒரு அர்பன் நக்சல். அவரது சகோதரர் மிலிந்த் டெல்முடே , கட்சிரோலி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 22 நக்சல்களில் ஒருவர்.
யாரின் கைகளில்
அம்பேத்கர் பற்றிய புத்தகத்தை வெளியிடவும், தொகுக்கவும் ஆளே இல்லையா? வி.சி., கட்சிக்கு முக்கிய நிதி அளிப்பவர் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன். தமிழக அரசியல் போக்கு எந்தளவு செல்கிறது?விழாவிற்கு செல்ல மாட்டேன் என திருமாவளவன் காரணம் சொல்லிவிட்ட நிலையில், துணை பொதுச் செயலர் பங்கேற்றார் என்றால், வி.சி.க., திருமாவளவன் கைகளில் உள்ளதா, துணைப் பொதுச்செயலர் கைகளில் உள்ளதா? அக்கட்சிக்கு ஒரு தலைவரா? இரண்டு தலைவரா?
உதாரணம்
மேடையில் கூட்டணி கட்சியை பற்றி பேசிய பிறகு கூட, துணைப் பொதுச்செயலர் இன்னும் அந்த கட்சியில் இருக்கிறார் என்றால், என்னை பொறுத்தவரை திருமாவளவன் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை. லாட்டரி விற்பனை செய்பவரின் மருமகனின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், கட்சிக்கு முக்கிய நிதி அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருமாவளவன் தயாராக இல்லை என்று அர்த்தம்.
இது தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி எப்படி உள்ளது என்பதை காட்டுகிறது. காசுக்காக ஒட்டி இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் நடக்கிறது என்பதற்கு இது உதாரணம்.
தயாரா
விஜய் மணிப்பூர் செல்ல தயாராக இருந்தால், அவருடன் மணிப்பூர் செல்ல நான் தயார். அம்மாநிலத்தை சுற்றிக்காட்ட நான் தயார். விழாவில் பேசியதில் தவறில்லை. நடிகராக இருந்து இப்போது வந்துள்ளார். சில விஷயங்களை அவர் புரிந்து கொள்ள வேண்டும். ஆதாரத்தின் அடிப்படையில் பேச வேண்டும்.
மன்னராட்சியை தமிழகத்திற்கு கொண்டு வந்தது யார்? உறுதுணையாக இருந்தது யார்? வி.சி., துணை பொதுச்செயலர் பதவி பெற்ற உடன் அவர் ஸ்டாலினிடம் தான் ஆசி வாங்கினார். தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகளை பிரிக்க சதி நடக்கிறது.
குடும்ப ஆட்சி
புத்தக வெளியீட்டு விழாவில் பா.ஜ.,விற்கு எதிராக விமர்சிப்பதை கண்டிக்கிறேன். மன்னராட்சி என சொல்கின்றனர். தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சி. ஒரே குடும்பம் மீண்டும் வந்தால், இதுபோன்று விமர்சனம் வரும். தமிழகத்தில் மன்னராட்சி நடக்கவில்லை. மக்கள் ஓட்டுப்போடுகின்றனர். வெற்றி பெறுபவர் முதல்வர் ஆகிறார். அவர் விருப்பப்படி துணை முதல்வர், அமைச்சர் ஆகின்றனர். குடும்ப ஆட்சியை அகற்ற பா.ஜ., முயற்சி செய்கிறது.
ஏற்பு இல்லை
கேரளா செல்லும் முதல்வர், முல்லைப் பெரியாறு பிரச்னையை பற்றி பேசுங்கள். தமிழக உரிமையை பறிக்கும் கேரள அரசின் நடவடிக்கையை பற்றிக்கூற வேண்டும். நீர் மேலாண்மையில் தி.மு.க., அரசு படுதோல்வி அடைந்துள்ளது.
உதயநிதி சினிமாவில் நடித்துள்ளார். பல படங்களை தயாரித்து உள்ளார். அவரது தந்தை கதாநாயகனாக நடித்துள்ளார். தாத்தா பல படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார். இன்றைக்கு சினிமா செய்திகளை பார்ப்பது இல்லை என்றால், சினிமா சரியில்லை என்பதை ஒப்புக் கொள்கின்றனரா அல்லது இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ் சினிமாவின் தரம் தாழ்ந்துவிட்டது என சொல்கின்றனரா? சினிமா செய்திகளை பார்ப்பது இல்லை என்ற உதயநிதியின் கருத்து ஏற்புடையது அல்ல. நான் தான் மார்ட்டின் மருமகனை அனுப்பினேன் என திருமாவளவன் கூறுவார் என்றால், அவரது கருத்துக்கு பொறுப்பு பொறுப்பு ஏற்றுக் கொள்வாரா.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
அண்ணாமலை பேட்டியை பார்க்க: