ADDED : மார் 21, 2024 04:14 AM

ஆர்.மணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கூடியிருக்கும் கூட்டத்தினர் முன்பாக, மைக்கில் எதை பேசினாலும் நம்பி விடுவர் என்ற நம்பிக்கையில், புருடா விடுவதை என்னவென்று அழைப்பது!
'மாநில அரசிடம் பணம் வாங்கி, திட்டங்களுக்கு மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது' என தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது, முழங்கி இருக்கிறார்.
'தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களையும் சமமாக மதித்து நாம் செயல்படுகிறோம். ஆனால், மத்திய அரசு அப்படி மாநிலங்களை சமமாக மதிக்கவில்லை. மாநிலங்களையே அழிக்க நினைக்கிறது.
'தேர்தல் நெருங்கி வருவதால், பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் வருகிறார். 2019ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி, இப்போது நடப்பதாக நாடகம்; தேர்தல் நடந்ததும் பணியை நிறுத்தி விடுவர்.
'பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு மாநில அரசு 75 சதவீத நிதி வழங்குகிறது. 'ஜல் ஜீவன்' திட்டத்திற்கு, 50 சதவீதம் மாநில அரசின் பணம் வாங்கி, இத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது' என்கிறார் ஸ்டாலின்.
மத்திய அரசின் திட்டங்களில், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதியோடு, ஸ்டாலின் மனைவி துர்கா நீங்கலாக மற்ற பிற அனைத்து கட்சியினரின் படங்களையும் அச்சடித்து ஸ்டிக்கர் ஒட்டி வேடிக்கை காட்டி கொண்டிருப்பது எந்த ஆட்சி என்பது, தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; இந்த பரந்த உலகில் தமிழர்கள் எங்கெங்கு வாழ்கின்றனரோ, அவ்வளவு பேருக்கும் தெரியும்.
அதை விடுங்கள்... ஸ்டாலினுடைய கோணத்திலேயே பார்ப்போம்!
மத்திய அரசுக்கே நிதியுதவி அளிக்கும் அளவுக்கு, தமிழ்நாடு அரசின் கஜானா நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது அல்லவா!
பிறகு ஏன் எதற்கெடுத்தாலும், 'மத்திய அரசு நிதியுதவி வழங்கவில்லை. மத்திய அரசு நிதியுதவி வழங்கவில்லை' என்று புகார் கூறக் கொண்டிருக்க வேண்டும்?
எய்ம்ஸ் மருத்துவமனை என்பது, தமிழக மக்களுக்கான மருத்துவமனை தானே? அந்த திட்டத்திற்கான முழு செலவையும், மாநில அரசே மனமுவந்து வழங்கி கட்டி முடித்திருக்கலாமே!
வீடு கட்டும் திட்டத்திற்கு 75 சதவீதமும், ஜல் ஜீவன் திட்டத்திற்கு 50 சதவீதமும் ஏன் பங்கு கொடுக்க வேண்டும்? மொத்த செலவையும் தமிழக அரசே பார்த்துக் கொள்ளலாமே?
நியாயமாக சிந்திப்பவர்களுக்கு, பிறழ்ந்து பேசத் தெரியாது. பிறழ்ந்து பேசுபவர் மனசாட்சிக்குப் புரியுமா அது?

