சட்டசபையில் இருந்து கவர்னர் ரவி வெளியேறியது ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்!
சட்டசபையில் இருந்து கவர்னர் ரவி வெளியேறியது ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்!
UPDATED : ஜன 06, 2025 10:14 AM
ADDED : ஜன 06, 2025 10:05 AM

சென்னை: 'அரசியல் சட்டமும் தேசிய கீதமும் தமிழக சட்டசபையில் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளன. இதனால் கவர்னர் சட்டசபையில் இருந்து வெளியேறினார்' என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
புத்தாண்டில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று (ஜன.,06) காலை 9:30 மணிக்கு, சட்டசபை கூட்ட அரங்கில் துவங்கியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய கீதம் பாட அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, கவர்னர் ரவி கூட்டத்தொடரை புறக்கணித்தார்.
இதற்கு விளக்கம் அளித்து, கவர்னர் மாளிகை தரப்பில், 9.43 மணிக்கு எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்று போடப்பட்டது. அந்த பதிவில் கூறியிருப்பதாவது: அரசியல் சட்டமும், தேசிய கீதமும் தமிழக சட்டசபையில் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தில் கூறியுள்ள முதல் கடமை. கவர்னர் ரவி சட்டசபைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டது.
தேசிய கீதத்தை பாடுவதற்கு முதல்வர் ஸ்டாலின், சபாநாயகருக்கு கவர்னர் ரவி வலியுறுத்தினார். ஆனால் தேசிய கீதம் பாட மறுப்பு தெரிவிக்கப்பட்து. அரசியலமைப்பு சட்டம், தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் கவர்னர் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறினார். தேசிய கீதம் பாடம் மறுக்கப்பட்டது கவலைக்குரிய விஷயமாகும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் சில நிமிடங்களில் அந்த பதிவை கவர்னர் மாளிகை நீக்கியது. அதன்பிறகு, மீண்டும் சில திருத்தங்களுடன் அந்தப் பதிவு மீண்டும் எக்ஸ் தளத்தில் போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல, இந்த முறையும் கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி உள்ளது.