முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? நன்றி சொன்னதாக திருமா பேட்டி
முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? நன்றி சொன்னதாக திருமா பேட்டி
ADDED : அக் 14, 2025 12:46 PM

சென்னை: ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வெளியிட்டதற்காக முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக் 14) முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: எந்த பெயரும் ஜாதி அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு. கடந்த காலங்களில் சில தலைவர்களின் பெயர்கள் ஜாதி பெயர்களுடன் அடையாளப்படுத்தப் பட்டிருந்தன.
ஏற்கனவே அவர்கள் கொண்டிருந்த அடையாளத்தைப் பின்பற்றுவதால் ஜாதியை ஆதரிப்பதாகாது. ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வெளியிட்டதற்காக முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம். இன்னும் சில ஜாதிப் பெயர்களில் உள்ள ''ன்'' விகுதியை மாற்றி ''ர்'' விகுதியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
கோவை அவினாசி ரோட்டில் உள்ள பாலத்தை ஜிடி என்று மட்டுமே பெயர் வைத்து புதிய தலைமுறையிடம் கொண்டு போய் சேர்த்தால் அது மகிழ்ச்சி. ஜிடி நாயுடு என்ற பெயரில் தான் அவரை அடையாளப்படுத்த முடியும் என்று ஒரு முடிவை அரசு எடுத்திருப்பதால், அது ஜாதியை வளர்ப்பதற்காக இருக்காது என நம்புகிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.