'சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது ஏன்?'
'சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது ஏன்?'
UPDATED : ஜன 31, 2024 07:26 AM
ADDED : ஜன 31, 2024 07:23 AM

சென்னை: ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத்துறை பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், அவர் அமைச்சராக நீடிப்பது குறித்தும் கேள்வி எழுப்பியது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமின் மனுவை, கடந்த 12ம் தேதி, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி, ''இவ்வழக்கில், புலன் விசாரணை முடிந்து விட்டது. அமலாக்கத்துறை வசம் ஆவணங்கள் உள்ளன. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், தலைமறைவாக உள்ளார் எனக்கூறி ஜாமின் மறுக்க முடியாது,'' என்றார்.
இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ''கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறையில் உள்ளார். அமைச்சராக அவர் தொடர்வது குறித்து, ஏற்கனவே, 'டிவிஷன் பெஞ்ச்' கருத்து தெரிவித்திருந்தது. அரசு ஊழியர் ஒருவர், 48 மணி நேரம் சிறையில் இருந்தால், அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஆனால், 230 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, அமைச்சராக தொடர அனுமதிப்பதன் வாயிலாக, மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்? குற்ற வழக்கில் ஒரு நீதிபதிக்கு தொடர்பு இருந்தால், அவரை நீதிபதியாக தொடர அனுமதிக்க முடியுமா?'' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு, மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், ''அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக, பதவி நீக்க தீர்மானத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவர் பதவியில் தொடர்வது குறித்து, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. அதற்கு, விருப்பம் உள்ளவர்கள் அவர் முன் ஆஜராகலாம் என, தலைமை நீதிபதி தெரிவித்தார். அவர் நீதிபதியாகவும் தொடர்ந்தார். அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமைச்சரை நீக்குவது தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவிட முடியாது,'' என்றார்.
அதைத்தொடர்ந்து, ஜாமின் மனுவுக்கு பதில் அளிக்க, அமலாக்கத்துறைக்கு, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, பிப்ரவரி 14க்கு தள்ளி வைத்தார்.