ADDED : ஜன 15, 2025 05:00 AM

புதுடில்லி,: ''காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலைப் பற்றி நான் பேசினால், பா.ஜ., உடனடியாக அதற்கு பதில் அளிக்கிறது. டில்லி சட்டசபைக்கான தேர்தல், இந்த இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள ரகசிய உறவை வெளிப்படுத்தும்,'' என, டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டில்லியில், முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. டில்லி சட்டசபைக்கு, பிப்., 5ல் தேர்தல் நடக்க உள்ளது.
இங்கு ஆம் ஆத்மி, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி உள்ளது.
சமீபத்தில் ஒரு பேட்டியின்போது, டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கருத்து தெரிவித்திருந்தார்.
'ஊழலை ஒழிப்போம் என்றார். ஆனால், அதை அவர் செய்யவில்லை. டில்லியில் அவரால் நடமாட முடியவில்லை.
அதற்கு காரணம் டில்லியில் உள்ள காற்று மாசு. டில்லியில் காற்று மாசு, ஊழல், விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது' என, ராகுல் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், 'ராகுல் என்னை கடுமையாக விமர்சித்துள்ளார். அதற்கு நான் பதிலளிக்கப் போவதில்லை. அவர் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற நினைக்கிறார். நான் நாட்டை காப்பாற்ற நினைக்கிறேன்' என, அரவிந்த் கெஜ்ரிவால் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு, பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாள்வியா, 'நாட்டை காப்பாற்றுவது இருக்கட்டும். முதலில் உங்களுடைய புதுடில்லி தொகுதியை காப்பாற்றி கொள்ள முடியுமா என்று பாருங்கள்'' என, பதிவிட்டிருந்தார்.
இதற்கு, ''நான் ராகுல் பற்றி ஒரு வரியில் கூறியிருந்தேன். அதற்கு பா.ஜ., ஏன் பதிலளிக்கிறது. இந்த இருக் கட்சிகளுக்கும் இடையே உள்ள ரகசிய உறவை, டில்லி சட்டசபை தேர்தல் வெளிப்படுத்தி வருகிறது,'' என, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.