கருணாநிதி ஆதரித்த ' ஒரே நாடு - ஒரே தேர்தல் ' முறையை இன்று தி.மு.க., எதிர்ப்பது ஏன்?
கருணாநிதி ஆதரித்த ' ஒரே நாடு - ஒரே தேர்தல் ' முறையை இன்று தி.மு.க., எதிர்ப்பது ஏன்?
UPDATED : செப் 21, 2024 12:17 PM
ADDED : செப் 21, 2024 11:56 AM

சென்னை: மத்திய அரசு கொண்டு வர உள்ள ' ஒரே நாடு- ஒரே தேர்தல் ' நடைமுறைக்கு தற்போது தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் 1971ம் ஆண்டு இதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரவு தெரிவித்து ' நெஞ்சுக்கு நீதி ' புத்தகத்தில் கட்டுரை எழுதி உள்ளார்.
பார்லிமென்ட் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறார். அப்போது முதல், தி.மு.க., காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தீர்மானம்
'ஒரே நாடு - ஒரே தேர்தல்' முறைக்கு எதிராக கடந்த பிப்., மாதம் தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போதும், இந்த தேர்தல் முறையை அனுமதிக்க மாட்டோம் என தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தது.
ஒப்புதல்
லோக்சபா, மாநில சட்டசபைகள், மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்கு பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகள், பரிந்துரைகள், கருத்துக்களை பெற்றது. இதன் அடிப்படையில் தன் அறிக்கையை, இந்தக்குழு கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தது.
கடந்த புதன்கிழமை பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ' ஒரே நாடு - ஒரே தேர்தல்' தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டது.இதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைள் துவங்கம். வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமர்சனம்
மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தற்போதும் தி.மு.க., தலைவர்கள் பேட்டி கொடுத்து வருகின்றனர்.
அக்கட்சியின் மகளிர் அணி தலைவி கனிமொழி கூறுகையில், '' ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தி.மு.க., மற்றும் முதல்வரின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரியும். இதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. மாநிலங்களின் எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றனர். பா.ஜ.,வினர் தங்களது எண்ணங்களை திணிக்கும் எண்ணத்தோடு உள்ளனர் என குற்றம்சாட்டினர்.
நேற்று சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமா என்பது தெரியவில்லை. முதலில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் அளவுக்கு மாநிலங்களை தயார் செய்ய வேண்டும். மாநிலங்களின் உரிமைகளை பறிக்கப்படுகின்றன என்றார்.
இவ்வாறு, தி.மு.க.,வினர் ஒருவர் பின் ஒருவராக இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனால், இந்த தேர்தல் நடைமுறைக்கு, தி.மு.க., முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி ஆதரவு தெரிவித்து உள்ளார். இது குறித்த தனது கருத்தினை அவர் எழுதிய ' நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த புத்தகத்தின் 273ம் பக்கத்தில் கருணாநிதி கூறியுள்ளதாவது: ஆழ்ந்த பரிசீலனைக்கு பின் கவர்னர் , தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 1971 ஜன.,05 ம் தேதி முதல் தமிழக சட்டசபையை கலைக்க உத்தரவிட்டார்.
இந்த அறிவிப்புக்கு பிறகு செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து சட்டசபையை கலைக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார்கள். அதற்கு நான் அளித்த பதில், '' இந்திய நாடு முழுவதும் பார்லிமென்ட் தேர்தல் முன்கூட்டியே நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தேர்தல் நடைபெறும் என்று உறுதியான உடன் தமிழகத்தில் அதன் விளைவுகளை பற்றியும் நடத்த வேண்டிய சூழ்நிலைகள் குறித்தும் ஆலோசித்து வந்தேன்.
இன்றைய சட்டசபை இன்னும் ஓராண்டு காலம் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் என்பது உண்மை. ஆனால், ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களைச் சந்திக்கும் நிலையால் ஆட்சி இயந்திரம் சரிவரச் செயல்படாதிருக்கலாம். எடுத்த கொள்கை முடிவுகளை ஆட்சி இயந்திரத்தின் வாயிலாக நிறைவேற்ற முடியாத தேக்க நிலை ஏற்படவும். பொது மக்களுக்கு சங்கடங்களை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று கருதுகிறேன்.
இன்னும் ஓராண்டு காலம் அமைச்சரவை அதிகாரத்தில் இருக்கலாம் என்றாலும் பொது மக்களது நன்மை கருதியும், பார்லிமென்ட் தேர்தலுடன் ஒருங்கிணைத்து தேர்தலை நடத்துவதே பொறுத்தமாகும் என்று தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த கருத்துக்களையும் அறிந்தேன். இந்திய நாட்டு அரசியலில் சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும். சமய சார்பற்ற அரசு கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்துகள் பலமான விவாதத்திற்கு உரியவைகளாகியிருக்கின்றன.
இந்த நோக்கங்களை நிறைவேற்றவும் தேவையான சட்டங்களை இயற்றவும் திட்டங்களை தி.மு.க., அரசு நடவடிக்கைகள் எடுத்தும் மத்திய அரசு எடுத்த இது போன்ற கொள்கை நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கிறது. இவ்வாறு அந்த புத்தகத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது இந்த மசோதாவை எதிர்க்க வேண்டியதற்கு என்ன காரணம். எதிர்க்கட்சியாக இருப்பதால் எதிர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டும் எதிர்க்கிறார்களா என கேள்வி எழுப்பி உள்ளனர்.