மருத்துவ கழிவு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் சரமாரி கேள்வி
மருத்துவ கழிவு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் சரமாரி கேள்வி
ADDED : ஜன 02, 2025 12:35 PM

சென்னை: 'கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து, தமிழகத்தில் கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என கேரளா அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.
கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொண்டப்படுவது வாடிக்கையானதாக இருந்து வருகிறது. இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயமே தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது, கேரள அரசுக்கும், கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து கேரளா அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து மருத்துவ கழிவுகளை லாரிகளில் ஏற்றி சென்றனர்.
மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம் தொடர்பாக, இன்று (ஜன.,02) மீண்டும் பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. அப்போது, 'கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து, தமிழகத்தில் கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என கேரளா அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.
அப்போது கேரளா அரசு தரப்பில், 'கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள். கழிவுகள் கொட்டிய மருத்துவமனை, ரிசார்ட்டுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது' என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, 'தமிழக எல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய ரிசார்ட் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கேரளா கழிவுகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும். தமிழக அரசு மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்' என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இது குறித்து, வரும் ஜன., 20ம் தேதிக்குள் பதிலளிக்க கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.