லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டி ஏன்? இ.பி.எஸ்., விளக்கம்
லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டி ஏன்? இ.பி.எஸ்., விளக்கம்
UPDATED : ஏப் 17, 2024 12:46 PM
ADDED : ஏப் 17, 2024 10:46 AM

சேலம்: ‛‛ பா.ஜ., காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் மாநிலங்களின் உரிமையை பறிப்பதால், தமிழகத்தின் உரிமையை மீட்க தனித்து போட்டியிடுகிறோம் '', என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
முதல்வர் சொல்வது பொய்
சேலத்தில் நிருபர்களை சந்தித்த இ.பி.எஸ்., கூறியதாவது: 2019 லோக்சபா தேர்தல் , 2021 சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை முழுமையாக திமுக நிறைவேற்றவில்லை. 10 சதவீதத்திற்கு குறைவான வாக்குறுதிகளே நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் பச்சைப்பொய் சொல்லி வருகிறார்.
போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய அரசாக திமுக அரசு உள்ளது. நதிநீர் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என பல பிரச்னைகள் தமிழகத்தில் நிலவுகிறது. இதனை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது.
மக்கள் அவதி
2019 ல் அளித்த வாக்குறுதிகளை பா.ஜ.,வும் நிறைவேற்றவில்லை. கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல் விலையை குறைக்காமல், வரி போட்டு மக்கள் மீது சுமையை சுமத்தி உள்ளனர். தி.மு.க.,வும், சட்டசபை தேர்தலுக்கு முன்னர், டீசல் விலை 4 ரூபாய் குறைப்போம் என வாக்குறுதி அளித்தது. ஆனால், குறைக்கவில்லை. அண்டை மாநிலங்களான கர்நாடகா, புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைத்தும் தமிழகத்தில் குறைக்கவில்லை. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். விலைவாசி உயர்வு, வேலையில்லாமல் மக்கள் அவதியடைகின்றனர்.
விவசாயிகள் பாதிப்பு
காவிரி விவகாரத்தை திமுக அரசு முறையாக அணுகாத காரணத்தால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை. இதனால், டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக காங்கிரஸ் அரசு கூறுகிறது.
முந்தைய பா.ஜ., அரசும் இதனையே சொல்கிறது. தேசிய கட்சிகள் இரண்டும், ஒரே மாதிரியாக சொல்லி வருகின்றனர். மேகதாது கட்டப்பட்டால், தமிழகம் பாலைவனமாகிவிடும். குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடும்.ஆனால், திமுக அரசு இந்த விவகாரத்தில் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
அதிமுக.,வுக்கு ஓட்டு
இளைஞர்கள், தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் மத்திய, மாநில அரசுகளின் குறைபாடுகளை தெரிவித்து வருகின்றனர். இதனால், முதல் முறை வாக்காளர்கள் அதிமுக.,வுக்கு ஓட்டுப்போட வேண்டும்.
வெற்றி பெறுவோம்
பா.ஜ., காங்கிரஸ் இரண்டு தேசிய கட்சிகளும், மாநிலங்களை புறக்கணிப்பதால், மாநில உரிமைகளை பறிப்பதால், தமிழகத்தின் உரிமையை மீட்க அ.தி.மு.க., தனித்துப் போட்டியிடுகிறது. லோக்சபா தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகம் வந்து சென்றுள்ளனர்.
திட்டங்களை துவக்கி வைத்து சென்றால், தமிழகம் வளர்ச்சி பெற்று இருக்கும். ஆனால், ஓட்டு சேகரிக்க மட்டும் வந்த சென்றது வேதனை அளிக்கிறது. அ.தி.மு.க., கூட்டணி பின்தங்காது. கூட்டணி வெற்றி பெரும்.
வெறும் கனவு
பா.ஜ., ஆட்சியிலும், காங்., ஆட்சியிலும் மாநிலங்களுக்கு போதிய நிதி வழங்கப்படவில்லை. எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும், தங்கள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குகிறார்கள். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகின்றனர்.
தி.மு.க., ஆட்சிக்கு வரும் போது எல்லாம் மின்வெட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார். பின்னர் எப்படி அவர் கைக்கு அ.தி.மு.க., செல்லும். அது கூட தெரியாமல் சிலர் பேசுகின்றனர். அ.தி.மு.க., பொன்விழா கண்ட இயக்கம். அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை வழங்கும் அ.தி.மு.க.,வை அழிப்போம் எனக்கூறுவது வெறும் கனவு. வெற்று வார்த்தை. லோக்சபா தேர்தல் முடிவில், ஆட்சி அமைப்பதில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என அந்த நேரத்தில் தான் தெரிவிப்போம்.இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

