நடிகர் கிருஷ்ணாவை கைது செய்தது ஏன்: போலீசார் விளக்கம்
நடிகர் கிருஷ்ணாவை கைது செய்தது ஏன்: போலீசார் விளக்கம்
UPDATED : ஜூன் 26, 2025 10:09 PM
ADDED : ஜூன் 26, 2025 05:54 PM

சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவை கைது செய்தது குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவை தீவிர விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தி நண்பர்களுக்கும் அளித்த நடிகர் ரீகிருஷ்ணாவும் , போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, விற்பனை செய்யும் கெவினும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இவ்வழக்கு தொடர்பாக நடந்த விசாரணை தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவியல் பூர்வமாகவும் , ஆதாரங்கள் அடிப்படையிலும் விசாரணை நடந்தது. இதன் அடிப்படையில் ஜெஸ்விர் என்ற கெவின் இன்று கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து
கொக்கைன் - 0.5 கிராம்
மெத்தம்பெடமைன்- 10.30 கிராம்
எம்டிஎம்ஏ - 02.75 கிராம்
ஓஜி கஞ்சா -2.40 கிரம்
கஞ்சா -30 கிராம்
எடை இயந்திரம் - 2
லேப்டாப்-1
மொபைல்போன் -1
ரூ.45,200 ரொக்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணா, கெவினிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியதுடன், அதனை நண்பர்களுக்கு பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் உட்கொள்பவருடன் வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்து அது தொடர்பாக கருத்து பரிமாற்றங்கள், போதைப்பொருள் உட்கொள்ளும் இடம், நேரம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார்.
இவர்களுடைய வங்கி பணிபரிவர்த்தனை மற்றும் இதுவரை பயன்படுத்தப்பட்ட போதைப்பொருட்கள், விசாரணை சாட்சியங்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள் அடிப்படையில் கிருஷ்ணா மற்றும் கெவின் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஜூலை 10 வரை நீதிமன்ற காவல்
நடிகர் கிருஷ்ணா மற்றும் கெவின் ஆகியோரை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். இருவரையும் ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.