சின்னம் தொடர்பான வழக்கு வாபஸ் ஏன்: ராமதாஸ் விளக்கம்
சின்னம் தொடர்பான வழக்கு வாபஸ் ஏன்: ராமதாஸ் விளக்கம்
ADDED : பிப் 28, 2026 06:37 AM

சென்னை: சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பா.ம.க., நிறுவனர் மற்றும் தலைவரான என்னால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை அங்கீகரிக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்; எனக்கும் , அன்புமணிக்கும் இடையே உள்ள உட்கட்சி பிரச்னை முடிவுக்கு வரும் வரை, தமிழகம், புதுச்சேரியில் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்.
அதுவரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டிருந்தது.
இதே காரணத்திற்காக, சென்னை சிவில் நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கு, வரும் மார்ச் 9ல் விசாரணைக்கு வருகிறது.
அப்போது அன்புமணி தரப்பு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூற வாய்ப்பு உள்ளது.
எனவே, அதே காரணத்திற்காக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளோம். பா.ம.க., தலைவர் யார் என்பதை சிவில் நீதிமன்றம் தீர்மானிக்கும்.
என் கவனத்திற்கு வராமல், எவ்விதமான கடிதத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. திட்டமிட்டு சிலர் என்னையும், என் தரப்பு வழக்கறிஞர் அருளையும் கொச்சைப்படுத்தி வருகின்றனர். கட்சியினர் குழப்பமடைய வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரிடம், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அளித்த மனுவில், 'ஒரு சின்னத்தை, இரு தரப்பினர் கேட்கும்போது, அதை முடக்கி, இரு தரப்புக்கும் புது சின்னங்களை கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'தற்போது, பா.ம.க.,வில் ராமதாஸ் - அன்புமணி இடையே பிரச்னைகள் உள்ளன. எனவே, மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

