UPDATED : நவ 20, 2024 02:58 PM
ADDED : நவ 19, 2024 10:54 PM

சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்து செல்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்றும் அவர் பிசியாக உள்ளார். ஆஸ்கர் விருது, கிராமி விருது, அகடமி விருது, கோல்டன் குளோபல் விருது மற்றும் தேசிய விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.
1995ம் ஆண்டு சென்னையில் சாய்ரா பானுவை திருமணம் செய்தார். திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில், ரஹ்மானை, அவரது மனைவி சாய்ரா பானு பிரிந்து செல்வதாக ஆங்கில மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
இது தொடர்பாக அவரது வக்கீல் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி ஆங்கில செய்தி சேனல் கூறியதாவது:
திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்து,கணவர், ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை சாய்ரா பானு எடுத்து உள்ளார். இந்த முடிவானது தங்கள் உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சில உணர்ச்சிபூர்வமான அழுத்தத்திற்கு பிறகு ஏற்பட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் இந்த தம்பதியினருக்கு இடையே சிரமங்களும், தீர்க்க முடியாத இடைவெளியும் உருவாகியது. உறவில் ஏற்பட்ட உணர்ச்சிப்பூர்வ முறிவுக்கு பின் எடுக்கப்பட்ட இந்த முடிவு, ஒருவருக்கு ஒருவர் ஆழமான அன்பை தொடர்ந்த போதிலும், சில முரண்பாடுகள் எங்களுக்கு இடையே தீர்க்க முடியாத ஒரு இடைவெளியை உருவாக்கி விட்டது.
அந்த முரண்களை சரி செய்து இணைப்பை தொடரும் முயற்சியில், இருவரும் தோல்வி அடைந்து விட்டதாக உணர்ந்தனர். ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவது என்ற வேதனை மற்றும் சோகமான முடிவை சாய்ரா பானு எடுத்துள்ளார். இந்த சவாலான நேரத்தில், வாழ்க்கையில் கடுமையான காலகட்டத்தை கடந்து செல்லும் தங்களின் தனிப்பட்ட உணர்வுக்கு மக்கள் மதிப்பு அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.