மாட்டுப்பட்டி அணையில் நீந்திய காட்டு யானைகள்: சுற்றுலா பயணிகள் ரசிப்பு
மாட்டுப்பட்டி அணையில் நீந்திய காட்டு யானைகள்: சுற்றுலா பயணிகள் ரசிப்பு
ADDED : ஜன 16, 2024 01:20 AM

மூணாறு : மாட்டுப்பட்டி அணையில் நேற்று நான்கு காட்டு யானைகள் தண்ணீரில் நீந்திச் சென்ற காட்சியை ஆச்சரியத்துடன் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். அங்கு அணையின்கரையோரம் ஏக்கர் கணக்கில், அப்பகுதியில் உள்ள மாட்டு பண்ணைக்கு பசுக்களின் தீவனத்திற்கு புல் வளர்க்கப்படுகிறது.
அவை ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் என்பதால் அங்கு வரும் காட்டு யானைகள் தீவனத்திற்கு கரையோரங்களில் நடமாடும். அவ்வப்போது தண்ணீரில் ஆனந்த குளியலிடுவதும் உண்டு. புல்மேடுகளிலும், கரையோரங்களிலும் விளையாடி சுற்றித் திரியும் யானைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம். நேற்று வந்த பயணிகளுக்கு மாறுபட்ட ரசனையான காட்சி கிடைத்தது.
படகு குழாமுக்கு அருகே கரையோரம் சுற்றித்திருந்த நான்கு யானைகள் நேற்று மாலை 4:00 மணிக்கு திடீரென தண்ணீருக்குள் இறங்கி நீந்தியவாறு மறுபுறம் உள்ள கரைக்குச் சென்றன. அதனை பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.