அரசு மருத்துவமனைக்கு திமுகவினர் செல்வார்களா:நயினார் கேள்வி
அரசு மருத்துவமனைக்கு திமுகவினர் செல்வார்களா:நயினார் கேள்வி
ADDED : டிச 10, 2025 03:07 PM

சென்னை:வெற்றுப் பெருமை பேசும் திமுகவினர் அடிபட்டால் அரசு மருத்துவமனைக்கு செல்வார்களா என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் தலையில் அடிபட்டு ரத்தக் காயங்களுடன் வந்த பெண்மணி ஒருவருக்கு, செவிலியர்கள் இல்லாத காரணத்தால் அம்மருத்துவமனையின் தூய்மைப் பணியாளரே முதலுதவி செய்துள்ள காணொளி கடும் அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை, போதிய மருத்துவர்களோ முக்கிய மருந்துகளோ தரமான ஸ்கேன் வசதிகளோ இல்லை, மழை பெய்தால் கூரை ஒழுகுகிறது, நோயாளிகளின் படுக்கைகளில் தெருநாய்கள் படுத்துத் தூங்குகின்றன, டார்ச் வெளிச்சத்தில் மருத்துவம் பார்க்கப்படுகிறது, தூய்மைப் பணியாளர்களால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திமுக ஆட்சியில் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு முற்றிலுமாக சிதைந்துவிட்டது என்பதற்கு இவற்றை விட வேறு என்ன சான்றுகள் வேண்டும்?
ஐந்தறிவு உள்ள அணிலுக்கெல்லாம் பாவம் பார்த்து அதைக் காப்பாற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்- கண்களுக்கு ஆறறிவு கொண்ட அப்பாவிப் பொதுமக்கள் திமுக ஆட்சியில் படும் துன்பங்கள் தெரியவில்லையா? திமுக ஆட்சியில் அழிவின் விளிம்பில் இருக்கும் மருத்துவத்துறையின் அவலங்களை மூடி மறைத்துவிட்டு உலகம் போற்றும் மருத்துவக்கட்டமைப்பைக் கொண்டுள்ளது திராவிட மாடல் என வாய் கூசாமல் வெற்றுப் பெருமை பேசும் உடன்பிறப்புகளோ அவர்களின் தலைவர்களோ அடிபட்டால் அரசு மருத்துவமனையை நாடுவார்களா?
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

